மணிப்பூர் வன்முறை! மோடி மவுனம்! சர்வதேச போட்டியில் அது என்ன கொடி? பிரபல கால்பந்து வீரரால் சர்ச்சை
இம்பால்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காத்து வரும் நிலையில் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் செய்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர்.

இவர்களை போல் தங்களையும் பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும் என மைத்தேயி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக வீடு, கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களாகியும் வன்முறை என்பது தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 130க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் உள்ளதால் மணிப்பூரில் பதற்றம் நிலவி வருகிறது.
சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதல்வர் பீரன்சிங் ஆகியோர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கூட அங்கு வன்முறை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி வன்முறை பாதித்த இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இருப்பினும் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையே தான் மணிப்பூர் விவகாரம் SAFF எனும் தெற்காசிய கால்பந்து தொடரின் சாம்பியன்ஷிப் போட்டி வரை எதிரொலித்துள்ளது. நேற்று பெங்களூரில் இறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியா-குவைத் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று 9 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் இரு அணிகளும் 1-1 கோல் அடித்து சமநிலை வகித்தன.
இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி சூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 4-4 கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையை எட்டியன. இதையடுத்து ஆறாவது வாய்ப்பில் இந்தியா கோல் அடிக்க, குவைத் மிஸ் செய்தது. இதையடுத்து இந்தியா வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இந்திய அணியின் கால்பந்து வீரரான 22 வயது நிரம்பிய ஜீக்சன் சிங் செய்த சம்பவம் சர்ச்சையை எழுப்பியது. மணிப்பூரின் தவபால் மாவட்ட்ததை சேர்ந்த சேர்ந்த இவர் மணிப்பூர் வன்முறையை குறிக்கும் வகையில் கொடி ஒன்றை தன்மீது போர்த்தி பரபரப்பை கிளப்பினார். அதாவது பழங்குடியின பட்டியலில் சேர்க்க கூறும் மைத்தேயி மக்களின் 7 நிறங்கள் அடங்கிய கொடியை தன் உடலில் போர்த்தி இருந்தது தான் சர்ச்சைக்கு முக்கிய காரணமாகும்.

இந்திய கால்பந்து அணியின் ‛டிபென்சிவ் மிட்பீல்டரான' ஜீக்சன் சிங் இவர் இந்திய அணி கோப்பையை வெல்வதில் மிக முக்கிய பங்காற்றினார். இதற்கிடையே தான் ஜீக்சன் சிங்கின் இந்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பிரிவினைவாதி, நாகரீகமற்றவர் எனும் வகையில் அவரை பலரும் காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலர், ஜீக்சன் சிங் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார். இது ஒரு மாநிலம் அல்லது பிராந்திய அளவிலான போட்டியல்ல. இது சர்வதேச போட்டி. இத்தகைய சூழலில் இப்படி அவர் செய்திருப்பது இந்தியாவை அவமானப்படுத்துவது போன்றதாகும். இதனால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் ஜீக்சன் சிங்கின் இந்த செயல் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications