சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயில்: சீனாவில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை!!
டெல்லி: சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பாக சீனா அதிகாரிகளுடன் அந்நாட்டுக்கு சென்றுள்ள இந்திய ரயில்வே அதிகாரிகள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை- டெல்லி இடையே 1,754 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயிலை இயக்குவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போது சென்னை- டெல்லி இடையேயான ராஜதானி எக்ஸ்பிரஸில் பயண நேரம் 28 மணி நேரமாகும்.
7 மணி நேரத்தில் டெல்லி..
இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்பட்டால் 6 அல்லது 7 மணி நேரத்தில் சென்னையில் இருந்து டெல்லியை சென்றடைந்துவிடலாம்.
உலகின் 2வது நீண்டதொலைவு புல்லட் ரயில் தடம்
சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து குவான்சோவ் வரையில் 2,298 கி.மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும் புல்லட் ரயில் உலகின் மிக நீண்ட தொலைவு புல்லட் ரயிலாகும். தற்போது சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயில் இயக்கப்பட்டால் உலகின் 2வது மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடமாக அமையும். ஒரு மணி நேரத்துக்கு 300 கி.மீ வரையிலான வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும்.
சீனாவில் இந்திய அதிகாரிகள்
இது தொடர்பாக சீனாவின் அதிவேக ரயில் சேவை நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக சதீஷ் அக்னிகோத்ரி தலைமையில் ரயில் விகாஸ் நிகாம் அதிகாரிகள் சீனா சென்றுள்ளனர். அங்கு இத்திட்டத்தின் சாத்தியம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆய்வுப் பணி காலம்..
சீன அதிபர் ஜின் பிங் அண்மையில் இந்தியா வந்திருந்தபோது புல்லட் ரயில் திட்டம் குறித்து இலவசமாக ஆய்வு செய்து வருவதாக உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் குழு சீனா சென்றுள்ளது. இந்த ஆய்வுப்பணியை நடத்தி முடிக்க 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை ஆகும்.
அதிக செலவு
இது மிக நீண்ட தொலைவாக அமைந்துள்ளதால், அதிகளவு செலவும் பிடிக்கும். சாதாரணமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் தடம் அமைக்க ரூ.5 கோடி செலவு ஆகும். அதுவே புல்லட் ரயிலுக்கான தடம் என்றால் ரூ.126 கோடி வரை செலவு ஆகலாம்.
30% மலிவு
இந்த புல்லட் ரெயில் தடத்தை பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா அமைத்து தந்தால் 30% மலிவாக இருக்கும் என கருதப்படுகிறது.