Exclusive: ஆப்கனில் தவிக்கும் தமிழர்கள்.. நொடிக்கு நொடி அச்சம்.. மத்திய அரசுக்கு உருக்கமான கோரிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டு படையினருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப வழியில்லாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
Recommended Video
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை படிப்படியாக பிடித்த தாலிபான்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை கைப்பற்றினர். காபூல் நகரில் அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளின் படைகள் இருப்பதால் அவ்வளவு எளிதாக தலைநகரம் வீழ்ந்து விடாது என்று அங்கிருந்த இந்தியர்கள் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதிபர் மாளிகையை கைப்பற்றி, ஆட்சி மாற்றம் நடந்து விட்டதாக அறிவித்து விட்டனர் தாலிபான்கள்.
இதனால்தான் ஆப்கானிஸ்தான் உள்ளூர் மக்களில் கணிசமானோர் கூட கிடைத்த விமானங்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே வேறு நாடுகளுக்கு சென்று விடுவது என்று வேக வேகமாக கிளம்பி கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சத்தின் காரணமாக இவ்வாறு மக்கள் வேறு நாடுகளை நோக்கிய புலம்பெயரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழர்கள் சிக்கியுள்ளனர்
இந்த நிலையில்தான் நேட்டோ படைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம் செய்து வரும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தாயகம் வர முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். காபூல் நகர விமான நிலையத்தின் அருகே அவர்கள் நேட்டோ படைகளுக்கு உணவு தயாரிக்கும், கூடத்தின் அருகே ஒன்று கூடி இருக்கிறார்கள். சண்டிகர், பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களும் அதில் இருக்கிறார்கள். உணவு சப்ளை செய்யும் காண்ட்ராக்ட் நிறுவனம் ஒன்றின் மேலாளரான, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நசீர், "ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு " அங்கிருந்தபடி வீடியோ வாயிலாக சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த சுமார் 30 பேர் உட்பட இங்கே பணியாற்றும் இந்தியர்கள் பலரும், தாயகம் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆப்கனில் மூடப்பட்ட இந்திய தூதரகம்
ஆனால் நேட்டோ படைகள் எங்களை விடுவதாக இல்லை. அவர்களுக்கு தேவையான உணவை நாங்கள் தயார் செய்து கொடுப்பதால் எங்களை அனுப்புவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அதேநேரம் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட விஐபிகள் ஏற்கனவே பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டனர். நாங்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு எங்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளோம் . ஆனால், எப்போது இந்தியாவுக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள் என்று உறுதியான ஒரு தகவலை தெரிவிக்காமல் இருக்கிறது இந்திய தூதரகம். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடப்பட்டுவிட்டது. எனவே இப்போது மத்திய அரசு மட்டுமே எங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. டெல்லியில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டால் எப்போதும் தொலைபேசி இணைப்பு பிசி என்ற நிலையில்தான் இருக்கிறது. யாரையும் தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவிக்கிறோம்.

திடீரென கிளம்பிய அமெரிக்க படைகள்
இப்போதைக்கு இங்கு 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் . எங்களை மீறி உங்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்று அவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் அவர்கள் எப்போது கிளம்புவார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியில் அமெரிக்க படைகள் திடீரெனக் கிளம்பி சென்றுவிட்டனர். எந்த ஒரு முன்னறிவிப்பும் தரவில்லை. அங்கு தாலிபான்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்படியான நிலைமை இங்கும் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதைக்கு உணவு உள்ளிட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பு என்பதுதான் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. எப்போது எங்கே இருந்து குண்டு விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கடத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். எனவே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சிறப்பு விமானம் மூலமாக எங்களை இந்தியா அழைத்து செல்ல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் , பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நசீர் நம்மிடம் தெரிவித்தார் .

தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்
wதமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அனைத்து இந்தியர்களும், இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதுதான் நமது அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது. எப்போது என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமா மத்திய அரசு? அழுத்தம் தருமா மாநில அரசு?












Click it and Unblock the Notifications