சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி: மத்திய அரசு
டெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி பதுக்கப்பட்டுள்ளது என்று முதல்முறையாக மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத் தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரை கொண்ட பட்டியலை மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி தாக்கல் செய்தது.
பிரான்சு அரசிடமிருந்து பெற்ற அந்த பட்டியலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்படியே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர். ஆனால் அந்த கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்து சிறப்பு புலனாய்வு குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இந்நிலையில் கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரில் 201 பேர் இந்தியாவில் வாழ்கிறவர்கள் அல்ல, அல்லது அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள். 427 பேர் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த 628 கணக்குகளில் தொடர்புடைய தொகை சுமார் ரூ.4 ஆயிரத்து 479 கோடி. இதில் 79 பேரின் கணக்குகளை வருமான வரித்துறை அளவிட்டுள்ளது. இவர்களின் தெரிவிக்கப்படாத கணக்கு இருப்பு தொகையின் மீது ரூ.2 ஆயிரத்து 926 கோடி வரியாக வட்டியுடன் பெறப்பட்டுள்ளது.
46 கணக்குகள் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் 3 கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வரி ஏய்க்கும் நோக்கத்தில் செயல்பட்ட 6 கணக்குகளில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மற்றவைகளில், தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுகின்றன.
வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில், ஒரு இரும்பு தாது ஏற்றுமதி நிறுவனம் உள்பட 31 கணக்குகளில் உண்மையான மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சேகரித்துள்ளது. அவர்களில் 11 பேர் மதிப்பை குறைத்து காட்டியதை ஒப்புக் கொண்டு, ரூ116.73 கோடி அபராதம் செலுத்தி விட்டனர். மற்றவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒடிசாவில் சுரங்க தொழில் அதிபர்கள் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.400 கோடி சொத்துகளை மத்திய அமலாக்கப்பிரிவு முடக்கி வருகிறது. கர்நாடகத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ரூ.995.97 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஜார்கண்ட்டில் ரூ.452.43 கோடி சொத்துகளை முடக்க தற்காலிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகத்தில் ரூ.884.13 கோடி சொத்துகளும், ஆந்திராவில் ரூ.1,093.10 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications