கோவாவில் தாக்கினால் 10 லட்சம் இந்தியரை விரட்டுவோம்: நைஜீரிய தூதரகம் மிரட்டல்!
பனாஜி: கோவாவில் நைஜீரியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் தங்கள் நாட்டில் வசிக்கும் 10 லட்சம் இந்தியரை வெளியேற்றுவோம் என்று அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி மிரட்டியுள்ளார்.
கோவாவின் பனாஜியில் அண்மையில் போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் நைஜீரிய நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான நைஜீரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அத்துடன் நைஜீரியர்கள் போலீசார் மீது தாக்குதலையும் நடத்தினர். டெல்லியில் உள்ள தூதரக அதிகாரி வரும்வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால் 50 நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா நேற்று கோவா சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 50 ஆயிரம் நைஜீரியர்கள்தான் இருக்கின்றனர். ஆனால் நைஜீரியாவில் 10 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். கோவாவில் நைஜீரிய நாட்டவர் மீதான நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் எங்கள் நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை விரட்டியடிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.
ஆனால் கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதாலே அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்திருக்கிறது.