சர்வதேச யோகா தினம்.... நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் யோகா முகாம்கள்
டெல்லி: நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகா பயிற்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், என ஐ.நா., சபை அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா., சபை யோகா தினத்தை அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முதலாக யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகாவின் புகழை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி
டெல்லி ராஷ்ட்ரிய பவனில் சர்வதேச இரண்டாவது யோகா தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் 30,000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். யோகாசனங்கள் செய்வதை பார்வையிட்ட அவர், மக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார். யோகா முடிந்து எழுந்த மோடியை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 100 மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
இதற்காக அங்கு 500 யோகா பயிற்சியாளர்கள் அவர்களது குழுவுடன் இந்த பயிற்சியை கற்பித்தனர். மேலும், 600 சிறப்பு பேருந்துகளும் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
டெல்லியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் விழாவில் டெல்லி துணை நிலை ஆளுநர் கலந்து கொண்டார். பின்னர் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
சத்தீஸ்கர் முதல்வர்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற யோகா நிகழ்சியில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குஜராத் முதல்வர்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற யோகா நிகழ்சியில், அம்மாநிலத்தின் முதல்வர் அனந்திபென் படேல் கலந்து கொண்டார். இந்த நிகழ்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா மேற்கொண்டனர்.
இந்திய கடற்படை
டெல்லியில் மற்றும் கொல்கத்தாவில் இந்திய கடற்படை சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். மேலும், சென்னை அடையாரில் நடைபெற்ற நிகழ்சியில், கடற்படை அதிகாரிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
"நேவி யோகா"
மும்பையில் மைதானம் ஒன்றில் நடைபெற்ற யோகா நிகழ்சியில், "நேவி யோகா" (NAVY YOGA) ஆங்கில எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டது போல கடற்படையினர் யோகா பயிற்சி செய்தனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சாகர் கப்பல், ஐஎன்எஸ் கப்பல்களிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.
இந்திய ராணுவம்
இந்திய ராணுவத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்ட்டது. டெல்லி ராணுவ முகாமில் நடைபெற்ற முகாமில் ராணுவத்தினர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். லக்னோ மற்றும் சியாச்சின் மலைப்பகுதி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் யோகா நிகழ்சியில் பங்கேற்றனர்.
இந்திய விமானப்படை
டெல்லியில் உள்ள வெலிங்டன் முகாமில் நடைபெற்ற முகாமில் இந்திய விமானப்படையினர் யோகா மேற்கொண்டனர். இதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா தினம் உற்றாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது.