எத்தனை பேர் விலகினாலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவேன்: 'தெனாவெட்டில்' ஹரியானா முதல்வர் ஹூடா!
சண்டிகர்: தமக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எத்தனையோ பேர் காங்கிரஸ் கட்சியைவிட்டே விலகிப் போனாலும் தம்மால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வலம் வருகிறார் ஹரியானாவின் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா.
90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹூடா 3வது முறையாகவும் முதல்வராவேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பிற மாநிலங்களைப் போல ஹரியானாவிலும் காங்கிரஸ் படுதோல்வியைத்தான் சந்தித்தது. வரப் போகும் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வி காத்திருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

வெல்வது நானே
ஆனால் ஹூடாவோ அனைத்தும் பொய்யாகும்... நிலபேர ஊழல், இன்ன பிற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்கிறார். உண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் இல்லை.

இந்தர்ஜித் சிங்
கடந்த சில மாதங்களில் ஹூடாவை எதிர்த்து காங்கிரஸை விட்டே விலகியவர்களும் ஏராளம்.. அதைவிட கட்சியிலேயே ஒதுங்கிக் கொண்டவர்களும் அனேகம் பேர். மத்திய அமைச்சராக இருக்கும் ராவ் இந்தர்ஜித்சிங், ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஹூடாவுடன் மோதல் ஏற்பட்டால் பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சராகிவிட்டார்.

வினோத் சர்மா
ஹூடாவின் நெருங்கிய சகாவாக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மா. அவரும் கடந்த மார்ச் மாதம் 40 ஆண்டு கால காங்கிரஸ் உறவை தூக்கி எறீந்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறீனார்.

அவதார்சிங்..
ஃபரிதாபாத் எம்.பி.யாக இருந்த அவதார் சிங்கும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யான பிரேந்தர் சிங்கும் விரக்தியில் இருக்கிறார்.

அமைச்சர்கள் குடைச்சல்
மேலும் ஹூடா அரசின் மூத்த அமைச்சரான அஜய்சிங் கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடத்தின் கட்டளைப்படி அவர் ராஜினாமாவை வாபஸ் பெற்றார். மற்றொரு அமைச்சரான கிரன் சவுத்ரியும் ஹூடா மீது காட்டத்தில் இருக்கிறார்.

வதேரா ஆதரவு
இத்தனை பஞ்சாயத்துகளுக்கு மத்தியிலும் தாம் எப்படியும் ஜெயித்துவிடுவேன் என்று மிக மிக திடமாக நம்பிக்கையோடு இருக்கிறார் ஹூடா. இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் 'ஆதரவு' ஹூடாவுக்கு இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

ஹூடா ராஜ்ஜியம்
இதனாலேயே தண்ணிதெளித்துவிட்ட கதையாக ஹரியானா காங்கிரஸ் கட்சியில் ஹூடா ராஜ்ஜியம்தான் கோலோச்சுகிறது. ஹூடாவின் தன்னம்பிக்கை எப்படி என்று அக்டோபரில் தெரிந்துவிடப்போகிறது!












Click it and Unblock the Notifications