மோடிக்கு ராவணன்போல் 100 தலையா இருக்கு? காங்கிரஸ் தலைவர் பேச்சு -அவமதிச்சுட்டாங்க! வெகுண்டெழுந்த பாஜக
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணவன் போன்று 100 தலைகள் உள்ளதா என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதிநடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பாஜகவின் இரு பெரும் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் தேர்தல், 2024 லோக் சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது.
காங். கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே! இமாச்சல் தேர்தலில் சாதிப்பாரா?
தீவிர தேர்தல் பிரச்சாரம்
ஆளுங்கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மல்லிகார்ஜுன் கார்கே
கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் குஜராத்தில் தங்கி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இன்றுடன் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் பிரச்சாரம் நிறைவடைய இருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மோடிக்கு 100 தலைகளா?
அப்போது பேசிய அவர், "நாம் மாநகராட்சி தேர்தல்களில் மோடியின் படத்தை பார்த்தோம். லோக் சபா தேர்தல்களிலும் மோடியின் படத்தை பார்த்தோம். தற்போது சட்டசபைத் தேர்தலிலும் மோடியின் படங்களையே பார்க்கிறோம். எங்கும் அவர் படங்களே உள்ளன. ராவணன் போல் மோடிக்கு என்ன 100 தலைகள் உள்ளனவா? வாக்குகள் மோடியின் பெயராலேயே பெறப்பட்டு வருகின்றன.
வேட்பாளர் பெயர் எங்கே?
அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி. வேட்பாளர்களின் பெயர்களில் வாக்குகளை திரட்டுங்கள். மோடியா உள்ளாட்சிக்கு வந்து வேலை செய்யப்போகிறார்? உங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அவரா வருவார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக குற்றச்சாட்டு
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மல்லிகார்ஜுன் கார்கே அவமதித்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா குற்றம்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "குஜராத் தேர்தல் களத்தின் சூட்டை தாங்க முடியாமல் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்டுப்பாட்டை இழந்து பிரதமர் மோடியை ராவணன் என்று அழைக்கிறார்.
குஜராத்திகளுக்கு அவமரியாதை
"பிறர் வாழ்க்கையோடு விளையாடுபவர்" தொடங்கி "ராவணன்" வரை குஜராத்தையும் அதன் மகனையும் காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இது மோடியை மட்டும் அவமதிப்பது இல்லை. ஒவ்வொரு குஜராத்தியின் மனதையும் காயப்படுத்தும் பேச்சு. காங்கிரஸின் மனநிலையை இது காட்டுகிறது." என்றார்.