இப்போ ஈராக்... அடுத்தது இந்தியா... பீதி கிளப்பும் பாதுகாப்பு நிபுணர்கள்
டெல்லி: ஈராக்கில் கிளர்ச்சி படைகள் திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதன் அடுத்த குறி இந்தியாவாக இருக்கலாம் என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா (ISIS) அமைப்பு, ஈராக்கில் அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி முக்கிய நகரங்கள் பலவற்றை கைப்பற்றியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
புதிய நாடு கொரசான்
இந்தியாவிலும் தனி நாட்டை உருவாக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, சமீபத்தில் வெளியிட்ட தங்களது உலக கட்டுப்பாட்டு முன்னோட்ட வரைபடத்தில், குஜராத் உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த தனி நாட்டுக்கு 'கொராசான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் இந்திய போராளிகள்
இந்திய பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறும் தகவல்கள்படி, ஈராக்கில் போராடும் கிளர்ச்சியாளர்களில் இந்தியாவில் இருந்து சென்றவர்களும் உள்ளதாக தெரிகிறது. இந்த சண்டை முடிந்தபிறகு, தாயகம் திரும்பும் கிளர்ச்சியாளர்கள், இந்தியாவிலும் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
திறமையை குறைத்து மதிப்பிட கூடாது
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, மிகவும் திறமையாகவும், அமைப்புசார்ந்தும், இலக்கை நோக்கிய தெளிவுடனும் போரிடுவதாக இந்திய பாதுகாப்பு துறை கணித்துள்ளது. மிகவும் அபாயகரமான அமைப்பு என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவுக்கு செல்வாக்கில்லை
இதுகுறித்து முரண்பாட்டு மேலாண்மை இன்ஸ்ட்டிடியூட் செயல் இயக்குநர் அஜய் ஷானி, கூறுகையில், இதற்கு முன்பும் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வலிமை இல்லை. எப்போதுமே மூன்றாம் நபர் மூலமாகத்தான் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். திட்டமிடுதல் என்பது நமது திறமையை செயல்படுத்தும் ஒரு நடைமுறைதான் என்பதை நினைவுகொள்ள வேண்டும். எனவே திட்டமிட்டு நாம் ஒன்றும் இப்போது செய்துவிட முடியாது.
பாதுகாப்பில் அலட்சியம்
உலகிலுள்ள அனைத்து ஜிகாதி போராளிகளுக்கும், இந்தியா மீது எப்போதுமே ஒரு கண் உள்ளது. ஆனால் நாம்தான் தொடர்ந்து அலட்சியத்தால் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிவருகிறோம். ஈராக்கில் போராடும் கிளர்ச்சியாளர்கள் ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தியா திரும்புவார்கள். அவர்களின் வெற்றியால் இந்தியாவிலுள்ள அனுதாபிகளும் உற்சாகம் பெறுவார்கள். அப்போது, இந்தியாவில் நிலைமை மோசமாகும்.
மேலும் பல நாடுகளில் பரவும்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 2006ல் ஈராக்கில் தனிநாடு அமைக்கும் திட்டத்திற்கு வந்தது. குறுகிய காலத்தில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது. அவர்கள் அடுத்தகட்டமாக இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சைப்ரஸ், துருக்கியின் சில பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடு உருவாக்க முயலுவார்கள். இவ்வாறு அஜய் ஷானி தெரிவித்தார்.