'அது என் பணமே இல்லை, எனக்கே தெரியாமல் வீட்டில் வச்சிருக்காங்க'. . அடித்து சொல்லும் நடிகை அர்பிதா
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டநிலையில், அந்த பணம் என்னுடையது அல்ல என்றும், எனக்கே தெரியாமல் வீட்டில் வைத்துவிட்டாங்க என்றும் அமலாக்கத்துறையிடம் அர்பிதா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் குருப் சி,குருப் டி போன்ற ஆசிரியர் பணி நியமனத்தில் அதிகளவில் பணமோசடி நடந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியிடம் அமலாக்கத்துறையின் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரான பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கட்டுக்கட்டாக பணம்
இதில் குறிப்பாக பார்த்தா சட்டர்ஜிக்கு தெரிந்தவருமான, நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூயாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பணத்தை எண்ணுவதற்கு புதிதாக பணம் எந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ரூ,21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு பிளாட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேரும் கைது
இந்த சோதனையின் போதும் அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ29 கோடி அளவில் பணம் கைப்பற்றட்டதாகவும், சில வெள்ளி தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். மொத்தம் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அர்பிதா முகர்ஜியையும், பார்த்தா சட்டர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

3-ந்தேதி வரை காவல்
இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வணிகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக பதவி வகித்த 69 வயதான பார்த்தா சாட்டர்ஜியை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை அர்பிதா முகர்ஜியும், பார்த்தா சட்டர்ஜியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றம் இருவருக்கும் ஆகஸ்டு 3-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் அமலாக்கத்துறை காவலில் அழைத்து செல்லப்பட்டனர்.

என்னுடைய பணம் இல்லை
அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அர்பிதா முகர்ஜியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். இதற்கு, அர்பிதா முகர்ஜி அந்த பணம் என்னுடையதே அல்ல என்று அடித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தனது வீட்டில் கைபற்றப்பட்ட பணம் எதுவும் தன்னுடையது இல்லை. தனக்கு தெரியாமலே வீட்டில் அந்த பணம் வைக்கப்பட்டு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். எனினும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications