அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து பணத்தை வசூலிக்க இந்தியாவுக்கு இத்தாலி கோர்ட் அனுமதி!!
ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் போன்ற உயர் பதவி வகிக்கும் தலைவர்கள் பயணம் செய்வதற்காக, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் 2010-ம் ஆண்டு ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஹெலிகாப்டர் பேரத்தில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சுமார் 10% தொகையை கமிஷனாக கொடுத்து ஊழல் செய்ததாக தகவல்கள் வெளியாயின. இதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து எஸ்.பி.தியாகி, ஐரோப்பிய இடைத்தரகர்கள் கார்லோ ஜெரோசா, கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹாசெக்கி உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தை கடந்த ஜனவரி 1-ந்தேதி இந்தியா ரத்து செய்தது.
இதையடுத்து அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வங்கி வாக்குறுதிகள், அபராதம் என சுமார் ரூ.5,470 கோடி வசூலிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழங்கி இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.240 கோடி மதிப்பிலான வங்கி வாக்குறுதியை இந்தியா ரொக்கப்பணமாக மாற்றிக் கொண்டு விட்டது.
இந்த நிலையில், தாங்கள் அளித்திருந்த ரூ.2,217 கோடி வங்கி வாக்குறுதிகளை இந்தியா பணமாக மாற்றிக் கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, இத்தாலியில் உள்ள மிலான் நீதிமன்றத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்கா வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மிலான் நீதிமன்றம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் அளித்திருந்த வங்கி வாக்குறுதியை பணமாக மாற்றிக்கொள்ள இந்தியாவுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இத் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த மிலான் நீதிமன்றம், ரூ.2,217 கோடி வங்கி வாக்குறுதியில் ரூ.1,818 கோடியை இந்தியா பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி இப்போது தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கு செலவுகளையும் இந்தியாவுக்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் திரும்ப வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.