டெல்லிக்குள் 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஊடுருவல்: உஷார் நிலையில் போலீஸ்
டெல்லி: ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் டெல்லியில் ஊடுருவியிருக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதன்கோட் தாக்குதலையொட்டி தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவியிருக்கக்கூடும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் டெல்லியில் உள்ள சில பிரபலங்களை தாக்கவும், சிலரை பிணையக் கைதிகளாக பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரிகளை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பஸ்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொது இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் உடனே போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து பஸ்ஸி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Citizens' vigil against suspicious persons/objects/activities is vital to counter terrorism. Report anything amiss no. 100 or helpline 1090.
— BS Bassi (@BhimBassi) January 3, 2016
சந்தேகத்திற்கு இடமான நபர்கள், செயல்கள், பொருட்களை பார்த்தால் தகவல் தெரிவிப்பது முக்கியம். அப்படி ஏதாவது நடந்தால் 100 அல்லது 1090 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்.
பதன்கோட் தாக்குதலையடுத்து டெல்லி ஏற்கனவே உஷார் நிலையில் இருக்கையில் தற்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கியமான இடங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு வெளியே துணை ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டெல்லி போலீசார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ள வர அனுமதிக்கப்படுகிறது. பிரபல மார்க்கெட்டுகள், விஐபிக்கள் நடமாடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.