ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் பெருமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்: தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழையும் நிலச்சரிவும் ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த பெருமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் குலாப்கர் பகுதியில் உள்ள கிஷ்த்வார் அருகே உள்ள ஹொன்சார் கிராமத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித்தீர்த்தது.
பெரு மழை வெள்ளத்தினால் அந்த கிராமத்தில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நான்கு உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருமழை வெள்ளத்தில் மாயமானவர்களை மீட்டும் பணியில் ராணுவத்தினரும் பேரிடர் மீட்புப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேகவெடிப்பு மழை வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க இந்திய விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தர்மசாலாவில் மேக வெடிப்பு ஏற்பட்டு சிலமணிநேரங்களில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீரில் இழுத்துச்செல்லப்பட்டன இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜம்முவில் மேக வெடிப்பு மழை வெள்ளத்தில் பலர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications