இப்படி ஒரு அதிசய கூட்டணியா? ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சிகள் வினோத முடிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் வினோதமான கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளிலும் இரு கட்சிகளிலும் நட்பு அடிப்படையில் பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்வது என்றும் எஞ்சிய 85 தொகுதிகளில் மட்டுமே கூட்டணி எனவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. காங்கிரஸு, இடதுசாரிகளும் ஒருபோதும் கேரளாவில் கூட்டணி கட்சிகளாக கை கோர்க்க முடியாத அரசியல் களமாக இருக்கிறது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைப்பது இல்லை. தற்போதைய ஹரியானா தேர்தலில் கூட ஆம் ஆத்மி, காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகின்றன.

பாஜக விமர்சனம்: இதனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கூட்டணி; தேசிய அளவில் மட்டும் இந்தியா கூட்டணியா? என விமர்சிப்பது உண்டு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் கூட்டணி வேறுபாடுகள் இருப்பதையே விமர்சிக்கிற கட்சிகளுக்கு நடுவேதான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸும் தேசிய மாநாட்டு கட்சியும் வினோதமான கூட்டணி முடிவை எடுத்துள்ளன.
காங்கிரஸ் மும்முரம்: காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி தொடர்பாக ஶ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷித், கேசி வேணுகோபால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி: இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளையும் எந்தெந்த கட்சி பகிர்ந்து கொள்வது என்பதில் சிக்கல் எழுந்தது. குறிப்பாக 5 தொகுதிகளை விட்டுத் தர இரு கட்சிகளுமே இணக்கம் காட்டவில்லை. இதனால் எஞ்சிய 85 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து இடங்களைப் பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
85 தொகுதிகளில் மட்டும் கூட்டணி: இதனடிப்படையில் தேசிய மாநாட்டுக் கட்சி 52, காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டது. இதர இரு இடங்களை சிபிஎம், பேந்தர் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. சரி காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விட்டுக் கொடுக்க மறுத்த 5 தொகுதிகளில் என்னதான் நிலவரம்?
5 இடங்களில் மட்டும் பரஸ்பரம் போட்டி: 5 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதாவது 85 தொகுதிகளில் கூட்டணி; 5 தொகுதிகளில் எதிரும் புதிருமாக களம் காண்கிற வினோத முடிவைத்தான் இரு கட்சிகளும் எடுத்திருக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி வேறுபாட்டுக்கே கலாய்க்கும் பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஒரே யூனியன் பிரதேசத்தில் 85 தொகுதிகளில் மட்டும் கூட்டணி 5 தொகுதிகளில் போட்டி என்கிற விந்தனையான நிலைப்பாட்டை விட்டு வைக்கவா போகின்றன? ஏற்கனவே காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இடங்களுக்குதான் கூட்டணி அமைக்கின்றன; செயல் திட்டத்தின் அடிப்படையில் இல்லையே என்கிற விமர்சனத்தை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி முன்வைத்தும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications