காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு.. குப்கர் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அந்த மாநிலத்தில் முதல் முறையாக, ஒரு தேர்தல் நடைபெற்று, அதற்கான ரிசல்ட் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கிறது. மற்ற கட்சிகளையும் விட பாஜகவுக்கு இந்த தேர்தல் அக்னி பரிட்சை என்று சொல்லலாம்.
ஜம்மு காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றி ஓராண்டு கடந்துவிட்டது. லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் காஷ்மீரில்தான், மத்திய அரசு முடிவுக்கு, ஏற்கனவே ஆட்சியில் இருந்த தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் வெற்றி யாருக்கு - இன்று மக்கள் தீர்ப்பு
எதிர்க்கட்சிகள் கூட்டணி
மேலும், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை 7 கட்சிகள் இணைந்து அமைத்துள்ளன. தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி துணை தலைவராக உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில்தான், டிசம்பர் 19ம் தேதியுடன் நிறைவடைந்த 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 20 மாவட்ட தலைநகரங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாஜக எதிர்பார்ப்பு
இந்த தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றாலோ, அல்லது கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலோ போதும். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கான தங்கள் முடிவை, காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று பாஜக பெருமிதம் தெரிவிக்க முடியும்.
அக்னி பரிட்சை
ஒருவேளை பாஜக மோசமாக தோற்றுப் போனால், காஷ்மீர் மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டதாக அர்த்தம். மேலும் சர்வதேச அரங்கிலும், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகள் எடுத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக காஷ்மீரை மத்திய அரசு கையாளுகிறது என பாகிஸ்தான் குற்றம்சாட்ட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தேர்தல் பாஜகவுக்கு அக்னி பரிட்சையாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் நிலவரம்
இன்று மாலை 4.30 மணியளவில், ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி 88 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 46, காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எனவே, குப்கர் கூட்டணி தலைவர்கள் இந்த தேர்தலை தங்களுக்கான வெற்றியாக பார்க்கிறார்கள். அதேநேரம் பாஜகவுக்கும் அது வலுவாக உள்ள பகுதிகளில் வலிமையாகவே இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.