சுரங்க ஊழலில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டியின் பிரசாரம் குறித்த விமர்சனம்... விளக்கம் அளித்த எடியூரப்பா!
சுரங்க ஊழலில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது ஏன் என்ற சர்ச்சைக்கு எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.
கலபுர்கி: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஜனார்த்தன ரெட்டி ஈடுபட்டுள்ளது சர்ச்சைக்குள்ளான நிலையில் அது குறித்து மாநில பாஜக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12-ஆம் தேதி பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான போது அதில் பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து மக்களவை உறுப்பினர் ஸ்ரீராமுலு களமிறங்கியுள்ளார்.
பிரசாரம்
இவர் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் நண்பர் ஆவார். இந்நிலையில் அவர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத சுரங்க ஊழல் புகாரில் ஜாமீனில் வெளிவந்த ஜனார்த்தன ரெட்டி பிரசாரம் செய்து வருவது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
நண்பருக்காகவே
இதுகுறித்து கர்நாடக மாநிலம் கலபுர்கியில் பாஜக மாநில தலைவரும் , முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா கூறுகையில் பாஜகவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவோர் பட்டியலில் ஜனார்த்தன ரெட்டியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கட்சிக்காக பிரசாரம் செய்யவில்லை, அவரது நண்பருக்காக மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்.
பதவியேற்பு விழா
பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவேன். வரும் மே 17 அல்லது 18-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொள்வேன். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வர்.
தாக்கம் ஏற்படும்
சாமுண்டீஸ்வர் மற்றும் பாதாமி தொகுதிகளில் போட்டியிடும் சித்தராமையா தோற்பது நிச்சயம். இந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய வரும் போது பாஜகவின் தேர்தல் பிரசாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.