தண்டனையை ரத்து செய்யாத வரை ஜெயலலிதா முதல்வராக முடியாது- ஆச்சார்யா
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திதான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை. எனவே தண்டனை ரத்து செய்யப்படாத வரை ஜெயலலிதாவால் மீண்டும் முதல்வராக முடியாது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் முதலில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட ஆச்சார்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி மட்டுமே வைத்து உத்தரவிட்டுள்ளது. அதை ரத்து செய்யவில்லை.
இதுதொடர்பான அப்பீல் மனுவை 3 மாதத்திற்குள் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்திலும், அதில் சாத்தியப்படாவிட்டால் உச்சநீதிமன்றத்திலும், இந்தத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டால் மட்டுமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக முடியும், தேர்தலிலும் போட்டியிட முடியும்.
தற்போதைய நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அப்படியேதான் உள்ளது. எனவே அப்பீல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார் ஆச்சார்யா.