ஜெ. குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்- வாதத்தை நிறைவு செய்தார் ஜெ. வக்கீல்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தம்முடைய இறுதி வாதத்தில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வலியுறுத்தினார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இம்மனு மீதான இறுதிவாதத்தை முன்வைத்த ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சட்டப்படி வழக்கை நடத்தவில்லை.
வருமானவரி ஆவணங்களை அது பரிசீலிக்கவே இல்லை. ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே வீட்டில்தான் வசிகின்றனர். ஆனால் போயஸ் தோட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இயங்கவில்லை. அப்படியான நிலையில் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களா? பணப் பரிமாற்றம் நடந்ததா? விசாரணை நீதிமன்றம் ஆராய்ச்சி செய்திருப்பது அர்த்தமற்றது.
ஆகையால் ஜெயலலிதா குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றார்.
இன்றுடன் நாகேஸ்வரராவின் வாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் ஜெயலலிதா தரப்பும் தம்முடைய வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ந் தேதிக்கு வைத்தனர்.
அன்றைய தினம் சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்.