ஜெயலலிதாவுக்கு 'தில்' அதிகம்... பெங்களூர் சிறை டிஐஜி 'புகழாரம்'!
பெங்களூர்: ஜெயலலிதா சிறையில் இருந்தாலும் தைரியத்தை இழக்காமல் உள்ளதாக சிறைத் துறை உயர் அதிகாரி ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவரை சந்திக்க சிறைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமான அதிமுகவினர் வந்தாலும் அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை.
தனது வழக்கறிஞர்கள் குழுவை மட்டுமே ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறுகையில்,
தைரியம்
நான் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரை பார்த்தது இல்லை. சிறையில் ரவுண்ட்ஸ் செல்கையில் தான் அவரை பார்த்துள்ளேன். அவர் நலமாக உள்ளார். சிறையில் இருப்பதால் அவர் தைரியத்தை இழந்துவிடவில்லை.
நன்றி
சிறை அதிகாரிகளுக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார். நேற்று மாலை 5.30 மணிக்கு நான் அவரை சந்தித்து சிறையில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டேன். ஒரு பிரச்சனையும் இல்லை. என் வேண்டுகோள்களை ஏற்றதற்கு நன்றி என்றார்.
உணவு
அவர் காலையில் பிரட், பால் மற்றும் காபி குடிப்பார். மதியம் மற்றும் இரவில் ஒரு கப் தயிர் சாதம், ஒரு ஆப்பிள், ஒரு வாழைப்பழம் சாப்பிடுவார். உணவு விஷயத்தில் அவர் மிகவும் கவனமாக உள்ளார்.
செய்தித்தாள்கள்
அவருக்கு செய்தித்தாள்கள் படிப்பதில் அதிக ஆர்வம். தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை தினத்தந்தி, தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட செய்தித்தாள்களை படிப்பார் என்றார் ஜெயசிம்மா.