சசியுடன் ஒரே செல்லில் இருக்க அனுமதி கேட்டு சிறைத்துறையிடம் ஜெ. மனு
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவை தன்னுடன் ஒரே செல்லில் அனுமதி கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
உடல்நிலைபாதிப்பு
சிறையில் உள்ள ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார். நீரிழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில்
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் டிஜிபி பாதுகாப்பு
சிறையில் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சுகன்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
சசிகலா உடன் இருக்க
இந்நிலையில், தன்னுடைய தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை தன்னுடைய அறையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா மனு அளித்துள்ளதாக பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுதாகரன் போல
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சுதாகரன், சுரங்க ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜனார்த்தன ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மெஃப்சுல் அலி கானுடன் ஒரே சிறை அறையை பகிர்ந்துகொண்டுள்ளார். இதனையடுத்தே ஜெயலலிதா இந்த மனுவை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.