பினாமி பரிவர்த்தனை நிரூபிக்கப்படவில்லை, சொத்துக்கள் கடனில் வாங்கியவை: ஜெ. வழக்கில் நீதிபதி
பெங்களூரு: ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து நீதிபதி குமாரசாமி விடுவித்து வெளியிட்ட மொத்தம் 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஜெயலலிதா, மைனராக இருந்தபோதிலே இருந்து வருமான வரி கட்டி வருகிறார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, கடன் பெற்றுதான், சொத்துக்கள் வாங்கியுள்ளார். சுதாகரன் திருமண விவகாரத்தில் செய்யப்பட்ட செலவுகள், செவி வழியாக கூறப்படுபவைதான். நிரூபிக்கப்படவில்லை.
ஜெ. சொத்து வாங்கவில்லை
குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஏ-1, ஒரு சினிமா நடிகை. அவரது தாய் போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார். அதையொட்டிய பகுதியை ரூ.8 லட்சத்துக்கு ஏ-1 வாங்கியுள்ளார். அதை தவிர்த்துவிட்டு வேறு சொத்துக்களை ஏ-1 வாங்கவில்லை.
பினாமி
குற்றம்சாட்டப்பட்ட ஏ-2 முதல் ஏ-4 வரையிலானவர்கள், ஏ-1 கொடுத்த பணத்தை பெற்று, சொத்துக்கள் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கோடநாட்டில் வாங்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.3.50 கோடிகளாகும். ஆனால், அரசு தரப்பு கூறியதை வைத்து பார்க்கும்போது, ஏ-1 முதல் ஏ-4 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு நடத்தும் நிறுவனங்களின் சொத்து மதிப்பே ரூ.9,34,26,053.56 கோடிவரை உள்ளது. கடனாக பெற்ற தொகையையும் சேர்த்தால் இது ரூ.24,17,31,274 கோடிவரை இருக்கும். அதை ஒப்பிட்டால் சொத்து மதிப்பு குறைவாகவே உள்ளது.
பினாமி சட்டப்படி பண பரிவர்த்தனை நிரூபிக்கப்படவில்லை. அரசு தரப்பில், பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை.
திருமணச் செலவு
ஏ-3 (சுதாகரன்) திருமணத்திற்காக ஏ-1 (ஜெயலலிதா) ரூ.28, லட்சத்து 68 ஆயிரத்தை செலவிட்டதாக தனது வருமான வரிக்கணக்கு தாக்கலில் தெரிவித்துள்ளார். நானும் இதையே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், இந்து சமூகத்தில், மணமகள் வீட்டார்தான் பெரும்பாலான திருமணச் செலவை செய்வார்கள்.
ரகுமான் இசை
ஏ-1 அப்போது முதல்வராக இருந்தார் என்பதற்காக, அவரே, அனைத்து செலவீனங்களையும் ஏற்றிருப்பார் என்று கருத முடியவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மாண்டலின் சீனிவாஸ் ஆகியோர், திருமணத்தின்போது இலவசமாகவே கச்சேரி செய்து கொடுத்துள்ளனர்.