ஜெயலலிதாவுக்கு வசதியாகவே அப்பீல் செய்ய தாமதிக்கிறது கர்நாடகம்?
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்காகவே உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதை தாமதம் செய்கிறது கர்நாடக அரசு என்று கூறப்படுகிறது.
காரணம், கர்நாடக அரசு செய்து வரும் தாமதம், பல வகையிலும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக மாறி வருவதே.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யும் என்றே தெரிகிறது. அப்படி செய்தால் அது ஜெயலலிதாவுக்கே ஒரு வகையில் சாதகமாக அமையும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
சனிக்கிழமை முதல்வராகும் ஜெயலலிதா
வருகிற சனிக்கிழமை மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் ஜெயலலிதா. இதற்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை அவரது கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுகிறது.
இன்னும் முடிவெடுக்காத கர்நாடக அரசு
மறுபக்கம், ஜெயலலிதாவுக்கு சாதகமான கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யக் கோரி பல்வேறு தமிழக கட்சிகளும் கரடியாக கத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
போவோம்.. ஆனால்
இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பில் கூறுகையில், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். இருப்பினும் முறைப்படி சட்ட பூர்வமான ஆலோசனைகளை அதற்கு முன்பு முடிக்க வேண்டியுள்ளது என்று குழப்பலாக பதில் கூறி வருகின்றனர்.
இன்று அமைச்சரவைக் கூட்டம்
இந்தச் சூழலில்தான் இன்று கர்நாடகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதில் ஜெயலலிதா அப்பீல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆனால் மூத்த அமைச்சர் டி.கே.சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு தீவிர ஆதரவாக இருப்பதால் ஜெயலலிதாவுக்குப் பாதகமான முடிவு எடுக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இடைக்காலத் தடை கிடைக்க வாய்ப்பில்லை
சட்ட வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்று விட்டால், அதன் பிறகு கர்நாடக அரசு அப்பீல் செய்தால், அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டே கேட்டு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தாலும் அதை உச்சநீதிமன்றம் ஏற்க வாய்ப்பில்லை.
குழப்பம் ஏற்படுவதை விரும்பாது
காரணம், முதல்வராக இருக்கும் ஒருவரை மறுபடியும் பதவி விலகச் சொல்லி, மாநிலத்தில் குழப்ப நிலை ஏற்படுவதை பொதுவாக உச்சநீதிமன்றம் விரும்பாது. எனவே இடைக்காலத் தடையை அது பிறப்பிக்காது என்றே கருதப்படுகிறது என்று கூறுகிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
வழக்கு முடியும் வரை பதவியில் நீடிக்கலாம்
அப்பீல் மனு மீதான வழக்கு முடியும் வரை ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்க இதன் மூலம் வழி பிறக்கும். அதாவது அதிமுக அரசு தனது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கும் வகையில் ஜெயலலிதா பதவியில் நீடிக்க வாய்ப்பு உருவாகலாம்.
இதற்குத்தானே ஆசைப்பட்டோம் பாலகுமாரா!
ஜெயலலிதா தரப்பும் இதைத்தான் எதிர்நோக்கியுள்ளது. இதைப் புரிந்து கொண்டுதானோ என்னமோ அல்லது வேறு காரணமோ, ஏதோ, சித்தராமையா அரசும் அப்பீல் செய்வதை தாமதைப்படுத்தி வருவதாக கூறுகிறார்கள்.
3 விதமான ஆலோசனை
கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் தனது வக்கீல்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஜெயலலிதா. அப்போது அவருக்கு 3 விதமான ஆலோசனைகளை வக்கீல்கள் குழு ஜெயலலிதாவுக்கு கூறியதாம்.
பதவி ஏற்கக் கூடாது
ஒரு குழு வக்கீல்கள் கூறுகையில், கர்நாடக அரசு நிச்சயம் அப்பீல் செய்யும். அந்த அப்பீல் மீதான விசாரணை முடியும் வரை முதல்வராகப் பதவியேற்காமல் இருப்பதே நல்லது என்றதாம்.
மீண்டும் பதவி விலக நேரிடலாம்
இன்னொரு குழு கூறுகையில், மீண்டும் முதல்வராக பதவியேற்க சட்டப்படி தற்போது பிரச்சினை இல்லைதான். ஆனால் அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்கும்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால் மீண்டும் பதவி விலக நேரிடும். அது ஜெயலலிதா பெரும் தர்மசங்கடமாகவும், பின்னடைவாகவும் மாறலாம் என்று எச்சரித்ததாம்.
வெல்வோம், நம்பிக்கையோடு இருங்கள்
3வது குழு கூறிய யோசனைதான் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை தந்ததாம். அதாவது அவர்கள் அப்பீல் செய்வார்கள். ஆனால் அதில் நம்மால் நிச்சயம் வெல்ல முடியும். கவலைப்படத் தேவையில்லை என்பதே அது. அதன் பிறகுதான் மீ்ண்டும் முதல்வராகப் பதவியேற்கும் முடிவுக்கு ஜெயலலிதா வந்தாராம்.