தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, கச்சத்தீவு மீட்பு.. பிரதமரிடம் ஜெ. முன்வைத்த கோரிக்கைகள்!!
டெல்லி: இலங்கையில் தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா.வில் இந்தியா கொண்டுவர வேண்டும்; இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் தமிழக பிரச்சனைகள், மீனவர் விவகாரம், ஈழத் தமிழர் பிரச்சனை உள்ளிட்டவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

காவிரி
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும்

முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு அணையில் நதிநீரை 142 அடிக்கு உயர்த்துவதைக் கண்காணிக்க மத்திய நீர் ஆணையப் பிரநிதியை நியமிக்க வேண்டும்

நெய்யாறு
கேரளாவின் நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் வேண்டும்.

நதி இணைப்பு
முதல் கட்டமாக தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும். பின்னர் மாநில நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,

தமிழீழ பொதுவாக்கெடுப்பு
இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியாவே கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். தனித் தமிழீழம் அமைக்க ஈழத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு
பாக் ஜலசந்தியில் உள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சிறிய பகுதி கச்சத்தீவு. அதன் ஆரம்ப உரிமையாளர் ராமநாதபுரம் ராஜா என்பதை நிரூபிக்க போதுமான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அதை எதிர்த்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் 1991-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டிலும் 2011-ஆம் ஆண்டிலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக, கச்சத்தீவு அருகே செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

கச்சத்தீவு மீட்பு
இதனால் 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரடி மானியத் திட்டம்
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் மாநிலங்கள் மூலம் அவற்றை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரக்கு சேவை வரி
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சரக்கு, சேவை வரியால் மாநிலத்தின் சுயாட்சி உரிமை பறிக்கப்படுகிறது.

நிதி
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு ரூ. 7,039.96 கோடி நிதி வர வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட திருவாரூர், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம், மெட்ராஸ், ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி ஆகிய பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2014-15 கல்வியாண்டில் அந்த இடங்களை நிரப்ப இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவாக ஒப்புதல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ்
ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலையை புனரமைக்க தேவையான நிதியை மத்திய அரசு முழுமையாக ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications