தமிழக காங்கிரசுக்கு நேரம் சரியில்லை! சிபிஐ வலையில் சிக்குகிறார் ஜெயந்தி நடராஜன்!
டெல்லி: தனியார் நிறுவனத்திற்கு அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 512.43 ஹெக்டேர் நிலம், ஜிந்தால் ஸ்டீல் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இதில் வனத்துறை அதிகாரிகள் சிலரது பெயரும் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் தகவல்களையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடமும் சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதையடுத்து நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்தபோது பல திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலும் இழுத்தடித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications