மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா! பிரதமர், ஜனாதிபதி ஏற்பு!!
டெல்லி: மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை வகித்து வந்தார் ஜெயந்தி நடராஜன். இந்நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயந்தி நடராஜன் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்று ஜெயந்திர நடராஜனின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் கட்சிப் பணி ஆற்றுவதற்காக ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயந்தியைத் தொடர்ந்து கட்சி பணிக்கு திரும்ப மேலும் சில மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதுவரை ஜெயந்தி நடராஜன் வசம் இருந்த சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக பொறுப்புகள், பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.