முஸ்லிம்களின் தொழுகை நேரம் ரத்து-அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கூட்டணி கட்சிகள் ஜேடியூ, எல்ஜேபி எதிர்ப்பு!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தொழுகை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மட்டும் 3 மணிநேரம் வழங்கப்பட்ட அனுமதியை அம்மாநில பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஜேடியூ மற்றும் எல்ஜேபி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்துவதற்கு 3 மணிநேரம் அனுமதி வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நடைமுறை தற்போது நீக்கப்படுவதாக அஸ்ஸாம் பாஜக தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான எல்ஜேபியும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பீகார் எதிர்க்கட்சியான ஆர்ஜேடியும் அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவின் மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், அஸ்ஸாம் அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தியர் ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, மரபுகளைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என்றார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், வெறுப்பைப் பரப்புகிற நடவடிக்கைதான் இது. மோடி- அமித்ஷாவிடம் நல்ல பெயரை பெறுவதற்காக அஸ்ஸாம் முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வக்பு வாரிய மசோதா, பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் என தொடர்ந்து வெறுப்பைத்தான் பாஜக தலைவர்கள் விதைத்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக ஆர்ஜேடி கட்சி இருக்கும் என்றார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நஞ்சைக் கக்கும் வகையில்தான் பேசுவதாக சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது. அத்துடன் முஸ்லிம்களை சித்ரவதை செய்வதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு இடையே பெரிய போட்டி நிலவுகிறது என்றும் சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications