ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவு ரத்து: ஹைகோர்ட் அதிரடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் அண்மையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும் இத்தடை உத்தரவை பிறப்பித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கொண்டிருப்பதால் கூடுதல் பெஞ்ச் அமைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இத்தீர்ப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர், எம்.எல்.ஏக்கள் விடுதியில் மாட்டிறைச்சி விருந்து நடத்தினார். இதனால் அவர் மீது சட்டசபையில் கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.