50% கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதில் அளித்தால் போதும்- காஷ்மீர் கல்வித்துறை அதிரடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறையால் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் 50%க்கு மட்டுமே பதிலளித்தால் போதும் என அம்மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இதனால் அங்கு மாணவர்கள் 100 நாட்களுக்கு அதிகமாக வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதியும் அவர்களை இந்த பாதிப்பில் இருந்து காப்பாற்றவும் தேர்வுகளில் கேட்கப்படும் 50% கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் என்றும்,10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் தேர்வுகள் தொடங்கும் நேரம் பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முடிக்கப்பட்டுள்ள பாடித்திட்டத்தின் படி 50% கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.