ஜார்க்கண்ட்டில் மோடி பிரசாரம்! காங்கிரஸ், ஜேஎம்எம், வங்கதேசம்- மியான்மர் முஸ்லிம்கள்தான் டார்கெட்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ் படித்த காங்கிரஸ் ஊழல் பள்ளியில்தான் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் கட்சி காங்கிரஸ்தான்; மிக மோசமான ஊழல் குடும்பமும் காங்கிரஸ் குடும்பம்தான் என ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சாடினார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஜாம்ஷெட்பூரில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை மற்றும் வானிலை காரணமாக இந்த ரோடு ஷோ நடைபெறவில்லை. அத்துடன் ராஞ்சியில் இருந்து தரைமார்க்கமாகவே காரில் ஜாம்ஷெட்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சந்தால் பர்கானாவில் பழங்குடிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பழங்குடிகளின் நிலங்கள் பறிபோகின்றன. பஞ்சாயத்துகளில் ஊடுருவல்காரர்கள் (வங்கதேச முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் ஊடுருவுகிறார்கள் என்பது பாஜகவின் நிலைப்பாடு) ஆதிக்கம் தலைதூக்கி இருக்கிறது. இதனால்தான் நமது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகமாகி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் அதிகரித்திருப்பதால் ஒவ்வொரு குடிமகனும் அச்சத்தில் இருக்கின்றனர். வங்கதேச முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்கிறது. இந்த ஊடுருவல்காரர்களும் பயங்கரவாதிகளும்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். காங்கிரஸ் என்கிற பேய் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கை கோர்த்ததால்தான் இது நிகழ்ந்தது. காங்கிரஸ் என்கிற பேய் எங்கெல்லாம் எந்த கட்சியுடன் எல்லாம் கை கோர்க்கிறதோ அங்கே எல்லாம் வாக்கு வங்கி அரசியல் தலைதூக்குகிறது. மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கியை தக்க வைக்கின்றனர்.
சம்பாய் சோரன், ஏழை ஆதிவாசி வீட்டில் பிறந்தவர். அவரிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்து அவமதித்து விட்டது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. அதேபோல சிபுசோரன் குடும்பத்தாலேயே சீதா சோரன் அவமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எல்லாம் சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் தருவார்கள்.
இந்த நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான்.. இந்த நாட்டிலேயே மிக மோசமான ஊழல் குடும்பம் எது என்றால் அது காங்கிரஸ் குடும்பம்தான். காங்கிரஸ் கற்றுக் கொண்ட பள்ளியில்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பயிற்சி எடுத்திருக்கிறது. அந்த பள்ளியின் பெயர் காங்கிரஸ் ஸ்கூல் ஆஃப் கரப்சன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications