ஜனாதிபதியை சந்தித்த ராகுல்.. மோடி அரசும், ஆர்எஸ்எஸ்ஸும் மாணவர்களை ஒடுக்குவதாக புகார்
அலகாபாத்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்துப் பேசி, ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்டவர் அப்சல் குரு. கடந்த 9-ம் தேதி இவருடைய நினைவு தினத்தன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக மாணவர் அமைப்பின் தலைவர் கன்யா குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த கைது சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத்தின் ஆதரவு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரை சேர்ந்த பாஜக தலைவர்கள் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்றனர்.
அதோடு, ராகுல் காந்தி மீது தேச துரோக சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கான்பூர் நகர போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடர்பான விவகாரங்கள் டெல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் மேற்படி சம்பவம் தொடர்பாக இங்கு வழக்குப்பதிவு செய்ய முடியாது என தெரிவித்த கான்பூர் போலீசார், அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் அவர், ‘ராகுல்காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அவர்களின் முழக்கங்களையும் நியாயப்படுத்தி உள்ளார். இது தேசதுரோகமாகும். இதனால் ராகுல் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் மறுவிசாரணையை வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இத்தகவலை நவ்பாரத் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நீதிபதியின் உத்தரவின்பேரில் இதே குற்றச்சாட்டின் கீழ் ராகுல் காந்தி மீது இங்குள்ள ஜார்க் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இதற்கிடையே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
கன்யாகுமார் விவகாரம் தொடர்பாகவும், போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த தன் மீதும் தேச துரோக வழக்குப் பாய்ந்துள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் அப்போது அவர் முறையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், 'நமது நாட்டின் மாணவர் சமுதாயத்தின் மீது செத்துப் போன தனது கொள்கையைத் திணிக்க முயற்சிக்கிறது ஆர்எஸ்எஸ்.
மாணவர்களின் குரலை நசுக்கவும், ஒடுக்கவும் மோடி அரசும், ஆர்எஸ்எஸ்ஸும் முயல்கின்றன. மாணவர்களால்தான் இந்த நாடு வளமை பெறுகிறது, வளர்ச்சி அடைகிறது. ஆனால் தவறான, செத்துப் போன தனது கொள்கையை அவர்கள் மீது திணிக்கப் பார்க்கிறது ஆர்எஸ்எஸ்.
இது மிகப் பெரிய குற்றமாகும். இப்படித்தான் ஹைதராபாத்தில் மாணவர் ரோஹித் வெமுலாவின் குரல் ஒடுக்கப்பட்டது. அரசுக்கு எதிராக அவர் பேசியதால் அவரது கதையை முடித்தனர்.
பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் எப்படித் தாக்கப்பட்டனர் என்பைத அனைவரும் பார்த்தோம். வன்முறையைத் தடுக்காமல் டெல்லி போலீஸார் எப்படி வேடிக்கை பார்த்தனர் என்பதை அனைவரும் பார்த்தோம். இதெல்லாம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப் பெயரையே தேடித் தரும் என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியுடன் லோக்சபா காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.