டெல்லி நீதிமன்ற வளாகத்தில் ஜே.என்.யூ. மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல்
டெல்லி: தேசவிரோத சக்திகளை ஆதரிப்பதா? எனக் கூறி டெல்லி நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் பேரு (ஜே.என்.யூ) பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் உடை அணிந்த கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக கருத்துகள் முன்வைக்கப்பட்டது என்பது இந்துத்துவா அமைப்புகளின் புகார். இது தொடர்பாக டெல்லி மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
#JNU teachers and students' protest outside VC office over JNU campus row. pic.twitter.com/0ripMb5Tq8
— ANI (@ANI_news) February 15, 2016
கன்னையாகுமாருக்கு ஆதரவாக ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனிடையே இன்று கன்னையாகுமார் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களும் மாணவர்களும் குவிந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதனையும் மீறி சீருடை அணிந்த கும்பல் ஒன்று தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக கூடுகிறீர்களா? எனக் கூறி மாணவர்களையும் பத்திரிகையாளர்களையும் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.