மறுக்கப்படும் விமான பணிப்பெண் வாய்ப்பு... கருணைக் கொலை செய்ய தமிழக திருநங்கை ஜனாதிபதிக்கு கோரிக்கை!
திறமை இருந்தும் திருநங்கை என்பதால் விமா பணிப்பெண் வாய்ப்பு மறுக்கப்படுவதால் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஷானவி குடியரசுத் தலைவருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளா
Recommended Video
டெல்லி : தொடர்ந்து முயற்சித்தும் திறமை மற்றும் முன் அனுபவம் இருந்தும் விமான பணிப்பெண் வாய்ப்பு மறுக்கப்படுவதால் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஷானவி குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழ வழியில்லை என்பதாலும் தன் மீது மத்திய அரசும், ஏர் இந்தியாவும் கருணை காட்டாத நிலையிலேயே விரக்தியோடு இந்த வேண்டுகோளை முன் வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் 26 வயது திருநங்கை ஷானவி பொன்னுசாமி. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2010-ம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த ஷானவி.
தன்னுடைய பெண் தன்மையை மறைத்து அதுவரை வாழ்ந்து வந்த இவர் பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முழுவதும் பெண்ணாக மாறியிருக்கிறார். பின் தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார்.
பெற்றோரால் கைவிடப்பட்டவர்
இவர் பெண்ணாக மாறியதை அறிந்த பெற்றோர்கள் ஷானவியை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பெற்றோர் கைவிட்டாலும் பரவாயில்லை என்று தானே போராடி வாழ முடிவு செய்து மீண்டும் பணியில் சேர முயற்சித்துள்ளார். ஏர் இந்தியாவின் நேர்முகத் தேர்விற்கு 4 முறை அழைக்கப்பட்டுள்ளார். எனினும் இறுதிப் பட்டியலில் ஷானவியின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து முகநூலில் இன்று குடியரசுத் தலைவருக்கு தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு உருக்கமான வேண்டுகோளை ஷானவி முன் வைத்துள்ளார்.
திருநங்கை என்பதால் மறுப்பு
அதில் ஏர் இந்தியாவின் நேர்முகத் தேர்வில் திறமை இருந்தும் நான் திருநங்கை என்பதால் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். இது குறித்து ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சத்திடம் கேட்பதற்கு எங்களது ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே தவிர திருநங்கைகளுக்கு அல்ல என பதில் அளித்துள்ளனர்.
வழக்கு போட்டும் பயனில்லை
எனக்குத் தகுதி இருக்கிறது. வேலை பார்த்த அனுபவமும் உண்டு. எல்லோவற்றையும் தாண்டி நான் இந்திய நாட்டின் பிரஜை. ஆனால் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதில் தகுந்த நடவடிக்கை வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டிருக்கிறேன்.
தட்டிக் கழிக்கும் அரசு
சுப்ரீம் கோர்ட்டும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 17 தேதி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை விமானப் போக்குவரத்துத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை.
கருணைக் கொலை செய்யுங்கள்
நான் உயிர் வாழ்வதை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை, நானும் முடிந்த வரை போராடிப் பார்த்து சோர்ந்து போய்விட்டேன். எனது சுயமரியாதை, தன்மானம் அனைத்தையும் இழந்துவிட்டேன் இனி எனக்கு வாழ்வதற்கு வழியில்லை என்னை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுங்கள் அல்லது என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று ஷானவி வீடியோவில் கதறுகிறார்.