வேதனை! ஒருபக்கம் உடைந்து விழும் வீடுகள்..மறுபக்கம் வாட்டி வதைக்கும் குளிர்..தவிக்கும் ஜோஷிமத் மக்கள்
டேராடூன்: மூழ்கும் பகுதியாக அறிவிக்கப்பட்ட ஜோஷிமத் நகரத்தில் ஆபத்தான கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு 'எக்ஸ்' குறியிடுகள் போடப்பட்டு வருகின்றன. மக்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் நிலையில், சில உள்ளூர் வாசிகள் எலும்பை உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இரவில் துங்குகின்றனர். ஒருபக்கம் வீடுகள் உடைவதையும் மற்றொரு பக்கம் வாட்டி வதைக்கும் குளிரையும் ஒருசேர அனுபவித்து மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
இயற்கை எழில் மிகுந்த மலைபிரதேச மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சிறிய நகரம் ஜோஷிமத்.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊர் ரிசிகேஷ் - பத்ரிநாத் ஹைவேயில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

500 வீடுகளில் விரிசல்கள்
எங்கு பார்த்தாலும் இயற்கை சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகையும் இங்கு அதிகமாக உள்ளது. இந்த அழகிய நகரம் தான் தற்போது மூழ்கத் தொடங்கியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் விழுந்துள்ளன. சாலைகளும் உடைந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் இந்த பகுதி அதிகமான எடையை தாங்கும் திறன் கொண்டது அல்ல என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மிஸ்ரா ஆணையம் எச்சரிக்கை
சமீப காலமாக அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர் மின் திட்டங்கள், சிறிய ஓடைகளால் பூமிக்குள் ஏற்படும் கசிவு ஆகியவையே தற்போது ஜோஷிமத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஜோஷிமத் பகுதியில் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என 1976- ஆம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டதே தற்போதைய விபரீத நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

வீதிகளில் தங்கும் மக்கள்
தற்போது வீடுகள் மூழ்கத் தொடங்கியிருப்பதால் மாநில பேரிடர் மீட்புப் படையுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்களுடன், ராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப்பணிக்காக ஹெலிகாப்டர்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 70 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜோஷிமத் நகரத்தை விட்டு பலரும் வெளியேறிவிட்ட நிலையில் சிலர் உள்ளூர் மக்கள் வெளியில் வீதிகளில் தங்கள் பொழுதை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடுமையான குளிர்
எலும்பை உறைய வைக்கும் கடுமையான குளிர் சூழலிலும் மக்கள் வீதிகளில் இரவு நேரங்களில் தூங்குகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் 'எக்ஸ்' என பெயிண்டுகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் குடியிருக்க தகுதியற்ற கட்டிடங்களை அடையாளம் கண்டு குறிப்பிடத் தொடங்கியதால் அந்த கட்டிடங்களில் வசித்து வந்தவர்கள் வெளியேற தொடங்கியிருக்கின்றனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications