மத்திய பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் எரித்துக் கொலை: சுரங்க மாபியா அட்டூழியம்
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்து வந்த 3 பேரால் பத்திரிக்கையாளர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பலகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் கோத்தாரி(40). அவர் இந்தி நாளிதழ் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்வோர் மீது அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் அவரை மிரட்டியும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு அவர் தனது நண்பருடன் பைக்கில் உம்ரி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலர் சந்தீப்பின் நண்பரை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றனர். அந்த நபர்கள் சந்தீப்பை காரில் கொலை செய்துவிட்டு அவரது உடலை வர்தா மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே வைத்து எரித்துவிட்டனர்.
சனிக்கிழமை இரவு சந்தீப்பின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்த விஷால் தண்டி, ப்ரிஜேஷ் துஹர்வால் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராகேஷ் நஸ்வானியை போலீசார் தேடி வருகிறார்கள்.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் உத்த பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஜகேந்தர் சிங் என்ற பத்திரிக்கையாளர் மீது அவரது வீட்டில் வைத்து போலீசார் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.