ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அப்பீல் மனு மீது திங்கள்கிழமை தீர்ப்பு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 11ம்தேதி, திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்றப் பதிவாளர் பி.ஏ. பாட்டீல் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சுமார் பதினெட்டு வருடங்களாக நடைபெற்றது. முதலில் தமிழகத்திலும், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் மே 12ம் தேதி வரை ஜாமீன் வழங்கியுள்ளது.
மே 12 வரை அவகாசம்
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
பரிசீலித்த குமாரசாமி
இந்நிலையில் பவானிசிங் வாதத்தை புறக்கணித்துவிட்டு, கர்நாடக அரசு தரப்பு மற்றும் அன்பழகன் தரப்பு வாதங்களை ஏற்று தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே திமுக தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பு தங்கள் வாதங்களை சமர்ப்பித்தனர். இந்த வாதங்களை பரிசீலித்து வந்தார் குமாரசாமி.
திங்கள்கிழமை தீர்ப்பு
தீர்ப்பு எழுதும் பணி கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், மே 11ம் தேதி திங்கள்கிழமை குமாரசாமி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். இன்று காலை இதுகுறித்து அவர் ஹைகோர்ட் பதிவாளருக்கு தகவல் அனுப்பியதாக ஹைகோர்ட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து ஊடகங்கள் உஷாராகின. இதன்பிறகு மாலையில், வழக்கு பட்டியலிலும் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. காலை 11 மணிக்கு குமாரசாமி தீர்ப்பு வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை தீர்ப்பு
திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதால், அதுகுறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை பதிவாளர் பாட்டீல் வெளியிட்டார். இருப்பினும் தீர்ப்பு வெளியாகும் அன்று கோர்ட்டுக்கு ஜெயலலிதா வரவேண்டியதில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். விசாரணையின்போது கூட அவர் ஆஜராவதில் இருந்து ஹைகோர்ட் விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.