தீர்ப்பை சாதகமாக பெற நீதிபதிகள் பெயரால் லஞ்சம்.. உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெயரை சொல்லி லஞ்சம் பெற்ற வழக்கை இன்று 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.
லக்னோவிலுள்ள மருத்துவ கல்லூரியை, அரசு கருப்பு பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவக்கல்லூரி தொடர்பான வழக்கில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குட்டூசி லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த நவம்பர் 9ம் தேதி விசாரணை நடத்தியபோது, 5 சீனியர் நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு இந்த வழக்கை மாற்றியது. ஆனால் நவம்பர் 10ம்தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா இதில் தலையிட்டு, எந்த நீதிபதியும் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை கையில் எடுக்க முடியாது. தலைமை நீதிபதிதான் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஷ்ரா மற்றும் கன்வில்கர் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.