இன்று முதல் "இவன்" இன்றி ஒரு பணியும் நடக்காது!
ஜிஎஸ்டியை தவிர்த்து இன்று முதல் எந்த விதமான மாற்றங்கள் நடைபெறவுள்ளது என்பதை பார்ப்போம்.
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் விலையேற்றம், விலை குறைப்பை தவிர்த்து இன்று முதல் நடைமுறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது முக்கியமானதாகும்.
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேசம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேற்று நள்ளிரவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தங்கம், செல்போன், வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கிறது.
ஜிஎஸ்டி அமலான ஜூலை 1ஆம் தேதி வரலாற்று புத்தகங்களில் நிச்சயம் இடம் பிடிக்கும். இந்த விலை ஏற்றத்தை தவிர்த்து மேலும் பல பெரிய மாற்றங்கள் நிகழும். இனி ஜூலை 1ஆம் தேதி முதல் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் பாருங்கள்.
ஆதார் இல்லாமல்...
அவன் இன்றி ஒரு அணுவு்ம அசையாது என்பதை போல் ஆதார் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. அதிலும் குறிப்பாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணையும் இன்று முதல் குறிப்பிட வேண்டியது கட்டாயம். அந்த 14 இலக்க எண் இல்லாமல் இனி வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.
பான் எண்ணுடன் இணைப்பு
வரி ஏய்ப்பைத் தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியது. வருமான வரி சட்டம் பிரிவு 139AA-யின்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை எனில், அந்த நபரின் பான் எண் செல்லாததாகிவிடும். ஜூலை 1 முதல் இது கட்டாயமாகும்.
புதிய பான், பாஸ்போர்ட் வாங்க...
புதிய பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகும். இன்று முதல் ஆதார் எண் இல்லாமல் பான் அட்டையை பெற இயலாது. அதேபோல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியலில் ஆதார் எண்ணையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. எனவே இனி ஆதார் இல்லாமல் பாஸ்போர்ட் இல்லை.
ஆதாருடன் பிஎஃப் கணக்கு...
ஜூன் 30-ஆம் தேதிக்குள் பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொழிலாளர் சேம நல நிதி அமைப்பு அறிவித்தது. மேலும் ஓய்வூதியதாரர்களும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதால் பிஎஃப் பணத்தை பெறுவதற்கான முறைகளை சுலபமாகும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. பிஎஃப் பணம் செட்டில் ஆகும் காலம் 20 நாட்களிலிருந்து 10 நாள்களாக குறையும்.
ஆதார் இல்லாமல் சலுகையில்லை
ரயில்வே டிக்கெட்டுகளில் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாகும். அதேபோல் அரசின் ஊக்கத் தொகை பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெற விண்ணப்பித்துள்ள மாணவர்களும் ஆதார் எண் விவரங்களை அளிக்க வேண்டும். ஆதார் இல்லாமல் ஊக்கத்தொகை இல்லை.
பொது விநியோகம் திட்டம்
அதேபோல் பொது விநியோக திட்டங்களின் கீழ் மானியம், சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்வதற்காக விமான நிலைய அதிகாரிகளால் அடையாள சான்றிதழுடன் வழங்கப்படும் டிஃபார்சர் கார்டுகள் ஆதார் இல்லாமல் இனி கிடையாது. ஆதார் இருந்தால் குடியேற்ற நடைமுறைகளை முடிப்பதற்கு ஆகும் நேரத்தை குறைக்கும்.
ஆன்லைன் விசா
இந்தியாவில் இருந்து சுற்றி பார்க்க செல்வோர் ஆன்லைனில் விசா பெறும் நடைமுறையை ஆஸ்திரேலிய அரசு இன்று முதல் தொடங்கியது. இணையம் மூலம் விசா பெறுவது அதன் நடைமுறையை துரிதப்படுத்தும்.
சவூதியில் குடும்ப வரி
சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு குடும்ப வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கு வெளிநாட்டினருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 100 ரியால்களும் (ரூ.1721), அடுத்த ஆண்டு 200 ரியால்களும், 2019-இல் 300 ரியால்களும், 2020-இல் 400 ரியால்களும் வசூலிக்கப்படும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
சிஏ படிப்புக்கு புதிய பாடத்திட்டம்
சார்ட்ர்ட் அக்கவுண்ட்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதில் சர்வதேச கணக்காளர்கள் கூட்டமைப்பின் கல்வித் தரம் மற்றும் புதிய வரி முறைகள், ஜிஎஸ்டி ஆகியவை இடம்பெறும்.