ஒடிஷா: கந்தமால் வன்முறை வழக்கு- குற்றம்சாட்டப்பட்ட 41 பேரும் விடுதலை
ஒடிஷாவின் கந்தமால் மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்த சாமியார் லட்சுமானந்தா சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அம்மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கந்தமால் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சிலவற்றில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
பெரும்பாலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பலரும் அடுத்தடுத்து விடுதலையாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் கூட கந்தமால் வன்முறை வழக்கு ஒன்றில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குத்ரிபடி கிராம மோதல் தொடர்பாக 41 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 41 பேருக்கும் எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.