காவிரி கலவரத்திற்கு நெய் வார்த்த கன்னட சேனல்கள்.. பிள்ளையை கிள்ளிய பிறகு தொட்டில் ஆட்டுகின்றன
பெங்களூர்: தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பெங்களூரில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதலை டிவி9 போன்ற முன்னணி கன்னட சேனல்கள் ஏறத்தாழ 'லைவாக' காட்டிக்கொண்டிருந்தன. போராட்டக்காரர்கள் இந்த டிவி சேனல் கேமராமேன்களையும் உடன் அழைத்து சென்றே பெரும் சேதங்களை செய்திருப்பார்கள் என எண்ணத்தோன்றியது.
மேலும், இந்த தாக்குதல்களை ஊக்கப்படுத்தும் விதமாக, செய்தி சேனல் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் உணர்ச்சியை ஊட்டியபடியே இருந்தனர். "காவிரியில் கர்நாடகாவுக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும், கன்னடர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். பந்த் தினத்தன்று கூட தமிழர்கள் உடமைகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. தமிழர்களை தாக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் கன்னடர்களை தாக்கியுள்ளனர். கன்னடரின் உடமைகளை தாக்கியுள்ளனர்" என்று திரும்ப திரும்ப ஒரு பொய்யை காலை முதல் மதியம்வரை டிவி9 தொகுப்பாளினி கூறியபடியே இருந்தார்.
உண்மை என்னவென்றால், பந்த் தினத்தில், தமிழக பதிவெண் கொண்ட 3 லாரிகள் பெல்லாரியில் நொறுக்கப்பட்டன. பெங்களூர் ஜெயநகரில் சாலையோரத்தில் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. தமிழக பஸ்கள் பல நாட்களாக பெங்களூருக்குள் வர முடியாமல் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
WATCH: Pro-Kannada activists set a vehicle on fire in Bengaluru during Protest over Cauvery water issue pic.twitter.com/FSMmpQ0FzT
— ANI (@ANI_news) September 12, 2016
பெங்களூரை சேர்ந்த தமிழ் இளைஞரை கன்னட அமைப்பினர் சேர்ந்து தாக்கி அவமானப்படுத்திய வீடியோ வெளியாகி 2 நாட்களுக்கு பிறகும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தனையையும் மறைத்துவிட்டு அமைதியாக போராட்டம் நடந்ததாக தொகுப்பாளினி கூறினார்.
இதைவிட அதிர்ச்சி என்னவென்றால், "தமிழர்கள் கன்னடர்களை தாக்கியும், உடமைகளை தாக்கியும் வன்முறை செய்தனர் அல்லவா.. கன்னடர்களுக்கு மட்டும் அடிக்கத்தெரியாதா என்ன.. அதைத்தான் இப்போது கன்னடர்கள் செய்து காட்டுகிறார்கள்" என்று வன்முறை காட்சிகளை ஒளிபரப்பியபடியே ஆதரித்தும், ஊக்கம் கொடுத்து பேசினார் அவர்.
இதேபோலத்தான் கன்னட மீடியாக்கள், அடி.. குத்து என்று கத்தாத குறையாக வன்முறைகளுக்கு தூபம் போட்டன. இதுகுறித்து டிவிட்டரில் கன்னடர்களில் நடுநிலைவாதிகளும், தமிழர்களும் முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு புகார்களை தெரிவித்தபடி இருந்தனர். இதனால் விழிப்படைந்த காவல்துறை, தொலைக்காட்சி சேனல்களுக்கு வார்னிங் கொடுத்தது.
இதையடுத்து, மதியம் முதல், ஸ்லைடு மூலம், ஒரு அறிவிப்பை அவ்வப்போது வெளியிடுகிறது டிவி9. அதில், தாங்கள் வன்மு்றையை ஆதரவு அளிக்கவில்லை என்றும், மக்கள் அமைதியாக இருக்கும்படியும் கூறிவருகிறது, கன்னடத்தில் நம்பர்-1 சேனலாக இருக்கும் டிவி9. ஆனால் அதற்குள் கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விட்டதுதான் சோகம்.