அம்மா கேண்டீன்போல.. பெங்களூரிலும் வரப்போகுது மலிவு விலை உணவகம்
பெங்களூர்: தமிழகத்தின் அம்மா கேன்டீன்போல பெங்களூரிலும் சித்து கேன்டீன் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அம்மா உணவகம் என்ற பெயரில் அரசு மலிவு விலை கேண்டீன் நடத்தி வருகிறது.
இதேபோல பெங்களூர் கலாசிபாளையம் காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிமுக சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.
அம்மா காண்டீன் போல அரசே பெங்களூரில் மலிவு விலை உணவகம் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சில மாதங்கள் முன்பு முதல்வர் சித்தராமையாவை சந்தி்த்து மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருந்தபோது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே புதிய அறிவிப்பை அரசால் வெளியிட முடியாமல் போனது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் நிருபர்ளிடம் கூறியதாவது:
பெங்களூரிலுள்ள முக்கியமான பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் அருகே அரசே கேண்டீன் திறக்க திட்டமிட்டுள்ளது. உணவு வழங்கும் பொறுப்பில் பங்கேற்க இஸ்கான் கோயில் நிர்வாகத்தையும் அழைத்துள்ளோம்.
பெங்களூர், மைசூர் போன்ற முக்கிய நகரங்களில் மட்டும் கேண்டீன் திறக்கப்படும். இம் மாத இறுதிவாக்கில் இது செயல்வடிவம் பெறும் என்றார். முதல்வர் சித்தராமையா பெயரை சுருக்கி சித்து கேண்டீன் என்று இவை அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.