கர்நாடக சட்டசபை தேர்தல்- பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மதச்சார்பற்ற ஜனதா தளம்?
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மதச்சார்பற்ற ஜனதா தளம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்க பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மதச்சார்பற்ற ஜனதா தளம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் கடைசியிலும் மே முதல் வாரத்திலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸும் போராடி வருகின்றன.
கர்நாடகத்தை பொருத்தவரை ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளில் பெரும்பான்மை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு செல்லும். பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் வாக்குகளை 'தனி மத அங்கீகாரத்தின்' பெயரால் காங்கிரஸ் பிரித்துவிட்டது.
பாஜகவின் வியூகம்
இந்த நிலையில் சிறுபான்மையினர், தலித்துகள் வாக்குகள் அப்படியே கொத்தாக காங்கிரஸுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறது. லிங்காயத்து வாக்குகள் பிரியும் நிலையில் ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளை மடை மாற்ற அதன் மடாதிபதிகளை பாஜக சந்தித்து பேசி வருகிறது.
காங். வாக்குகளை பிரிக்க...
அத்துடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் 3-வது அணியை அமைத்துள்ளது. பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்திருக்கிறது. மஜ்லிஸ் கட்சியுடனும் அக்கட்சி கை கோர்க்க இருக்கிறது. இது அப்பட்டமாக காங்கிரஸ் வாக்குகளை சிதறடிக்கும் ஒரு முயற்சிதான்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் மீது ராகுல் பாய்ச்சல்
இதைத்தான் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவின் வெற்றிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் பாடுபடுகிறது; ஆனால் அது நடக்காது என கூறியுள்ளார்.
ஜேடியூ(எஸ்) இரட்டை நிலை
கர்நாடகா தேர்தலைப் பொறுத்தவரையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; ஆட்சி அமைப்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்சியைப் பொறுத்தவரையில் கர்நாடகா மேல்சபையில் பாஜகவுடன் கூட்டு; உள்ளாட்சியில் காங்கிரஸுடன் கூட்டு என இரட்டை குதிரை சவாரி செய்கிறது.
தீர்மானிக்கும் சக்தியாக ஜேடியூஎஸ்
தொங்கு சட்டசபை அமையும் போது கிங்மேக்கராக மதச்சார்பற்ற ஜனதா தளமே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. என்னதான் காங்கிரஸ் இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சாடினாலும் தேர்தலுக்குப் பின் 'அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை' என்கிற சொலவடைகள் சர்வ சாதாரணமாக வெளிப்படத்தான் செய்யும்.