தேர்தல் ரிசல்ட் வந்த நாள் முதல் பாஜகவுக்கு தொடர் சரிவு.. யோசிக்கவே விடாமல் நாக்-அவுட் செய்த காங்.!
கர்நாடகாவில் பாஜக செய்த 56 மணி நேர ஆட்சி தற்போது அவர் பதவி விலகியதால் முடிவிற்கு வந்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக செய்த 56 மணி நேர ஆட்சி தற்போது அவர் பதவி விலகியதால் முடிவிற்கு வந்துள்ளது. 15ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே பாஜகவிற்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் எளிதாக சிக்ஸ் அடித்துக் கொண்டு இருந்த பாஜக, தன்னுடைய முதல் தென்னிந்திய பயணத்திலேயே பெரிய அளவில் சறுக்கி இருக்கிறது. அமித் ஷா கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரிய சறுக்கல் இது. இந்த மோசமான தோல்வியில் இருந்து அவர் வெளியே வர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.
கடந்த 4 நாட்களில் கர்நாடகாவில் மட்டுமல்ல இந்தியா முழுக்க நடந்தது பரபர களேபரங்கள். ஒரு சினிமாவில் நடப்பதைவிட பல டிவிஸ்டுகள் இதில் நடந்தது.
எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பாஜக கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஒரு சமயத்தில் பாஜக 116 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதனால் பாஜக கர்நாடகாவில் வெற்றிபெற்றுவிட்டது என்று இந்தியா முழுக்க கொண்டாட்டம் நடந்தது. பாஜக தொண்டர்கள், தலைவர்கள் எல்லோரும் கொண்டாடினார்கள். எடியூரப்பா பதவி ஏற்பு விழாவிற்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டது.
மாறியது
ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் எல்லாம் மொத்தமாக மாறியது. 116 தொகுதிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாஜக சரிய தொடங்கியது. கடைசியில் 104ல் வந்து பாஜக நின்றது. பாஜக தனித்து ஆட்சி அமைக்கலாம் என்ற ஆசையில் பெரிய மண் விழுந்தது. பாஜக போட்டு வைத்து இருந்த கொண்டாட்ட திட்டங்கள் எல்லாம் மொத்தமாக தள்ளி வைக்கப்பட்டது.
பெரிய அதிர்ச்சி
ஆனால் பாஜகவிற்கு உடனடியாக பெரிய அடுத்த அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டது அப்போதுதான். காங்கிரஸ் கட்சி மஜத உடன் சேர்ந்து கொண்டு, குமாரசாமியை முதல்வராக்க ஒப்புக்கொண்டது. பாஜக இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர்கள் செய்து வைத்து இருந்த திட்டத்தில் மொத்தமாக மண் விழுந்தது. மேலும் காங்கிரஸ் மஜத என இரண்டு கட்சிகளுக்கும் மொத்தமாக 117 எம்எல்ஏக்கள் என்ற பெரிய பலமும், பெரும்பான்மையும் இருந்தது.
ஆளுநர் உதவி
ஆனால் பாஜகவிற்கு ஆண்டவன் கைகொடுத்தாரோ இல்லையோ ஆளுநர் கைகொடுத்தார். பெரும்பான்மை இருக்கும் காங்கிரஸ் மஜத கூட்டணியை அழைக்காமல், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதற்கு பாஜக கட்சி பல ஆதரவான கருத்துக்களை கூறி, சப்பைக்கட்டு காட்டியது. ஆளுநரின் இந்த மோசமான நடவடிக்கை இந்தியா முழுக்க பிரச்சனையை உருவாக்கியது. அன்று இரவே காங்கிரஸ் கட்சி நீதிமன்றம் சென்றது.
நீதிமன்றம் சென்றனர்
கடைசியாக யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்ட போது நீதிமன்றம் இரவில் கூடியது. அதன்பின் இப்போதுதான் நீதிபதிகள் ஒரு வழக்கு காரணமாக இரவில் விசாரணை நடத்தினார்கள். மறுநாளே எடியூரப்பா பதவி ஏற்க இருந்தார். ஆனால் நீதிமன்றம் இதில் எந்த முடிவும் எடுக்காமல் வழக்கை மறுநாள் விசாரிப்பேன் என்று கூறியது. மேலும் எடியூரப்பா பதவி ஏற்கவும் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
பதவி
பல சர்ச்சைகளுக்கு இடையில் எடியூரப்பா பதவியேற்றார். 17ம் தேதி காலை அவர் பதவியேற்ற போதே, அவருக்கு பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ், மஜத எதிர்ப்பை மீறித்தான் அவர் பதவியேற்றார். முக்கியமாக மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் யாருமே அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மட்டும் பதவியேற்றுக்கொண்டார். எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.
நீதிமன்றம்
இதன் பின் நடந்தது எல்லாம் பாஜகவிற்கு எதிரான திரைக்கதை மட்டுமே. 18ம் தேதி மதியம் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எடியூரப்பா பதவி ஏற்று ஒருநாள் கூட ஆகி இருக்காது. அவருக்கு வழங்கப்பட்ட 15 நாள் அவகாசத்தை தடை செய்துவிட்டு, இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும். சட்டசபையை கூட்டுங்கள் என்று சிக்ரி தலைமையிலான அவை ஆணையிட்டது.
ரிசார்ட் அரசியல்
இதற்கு முன்பு பெரும்பான்மை இல்லையென, காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் எல்லோரும் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பாக காக்கப்பட்டனர். பாஜகவும் எப்படியாவது அவர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் பெங்களூரில் மிகவும் பாதுகாப்பாக ஈகிள்டன் சொகுசு விடுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். சொகுசு விடுதிக்கு பாதுகாப்பை தடை செய்து பாஜக நிறைய பிரச்சனை செய்தது.
ஹைதராபாத் சென்றார்கள்
இந்த நிலையில் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் கொச்சி செல்வதாக இருந்தது. ஆனால் மத்திய அரசு விமானத்திற்கு அனுமதி அளிக்காமல் பிரச்சனை செய்தது. இதையடுத்து இரவோடு இரவாக காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் எல்லோரும் ஹைதராபாத் சென்றார்கள். பாஜக ஆளாத 4 மாநிலங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தது. ஹைதராபாத்தில் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
ஆடியோ
இதன் பின் ஓடிக்கொண்டு இருந்த காங்கிரஸ் திருப்பி அடிக்க ஆரம்பித்தது. முதல்முதலாக காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக எப்படி பேரம் பேசியது என்று ஆடியோ வெளியிட்டது. ரெட்டி சகோதரர்கள் பேசிய ஆடியோ, எடியூரப்பா பேசிய ஆடியோ, எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுக்கப்பட்டது என்று வரிசையாக காங்கிரஸ் இந்தியா முழுக்க புயலை கிளப்பியது.
மீண்டும் கூட்டு
இந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமிக்கப்பட்டார் . இதுவும் பெரிய பிரச்சனையை கிளப்பியது. ஆனால் நீதிமன்றம் அவரின் நியமனத்தை தடை செய்ய மறுத்துவிட்டது. மேலும் இன்று கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
கடைசிவரை நடக்கவில்லை
கடைசி நேரம் வரை சில எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து எப்படியும் எடியூரப்பா அரசு பிழைத்துக் கொள்ளும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் காணாமல் போய் இருந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் உள்ளிட்ட எல்லா காங்கிரஸ் எம்எல்ஏக்களும் மீண்டும் காங்கிரஸ் கூடாரத்திற்கு திரும்பியதுதான் மிச்சம். கடைசி வரை பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள் விழிக்கவேயில்லை.
எல்லாமே கைவிட்டு போனது
கடைசியில் எல்லாவற்றிற்கும் மேலாக எடியூரப்பாவே தாங்கள் தோற்றுவிட்டதாக பேட்டியளித்தார். கடைசியில் அரை மணி நேரத்தில் 28 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேண்டும் என்ற நிலைமை இருந்த போது எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். வெறும் 56 மணி நேர ஆட்சி செய்வதற்கு கர்நாடக பெரிய ரோலர் கோஸ்டர் ரைடரே சென்றுள்ளது.