பெங்களூர் நகருக்கு ரூ.2500 கோடி.. கர்நாடக பட்ஜெட்டில் பம்பர் அறிவிப்புகளை வெளியிட்ட சித்தராமையா
Recommended Video
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெங்களூர் நகர வளர்ச்சிக்காக மட்டுமே ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் சித்தராமையா தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இன்னும் 2 மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், 28 சட்டசபை தொகுதிகளை கொண்ட பெங்களூர் வளர்ச்சிக்கு வாரி வழங்கி வாக்காளர்களுக்கு ஆசை காட்டியுள்ளார் சித்தராமையா என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
முக்கிய அறிவிப்புகள் இவைதான்:
150 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படும்.
மாநகர எல்லைக்குள் உள்ள 100 கி.மீ தூரத்திற்கு முக்கிய சாலைகள் மேம்படுத்தப்படும்.
8 முக்கிய சந்திப்புகளில் அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
150 கிமீ தூரத்திற்கு கழிவு நீர் பாதை மேம்படுத்தப்படும்
250 கி.மீ தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்படும்
மல்டி ஸ்டோர் வாகன பார்க்கிங் கட்டிடங்கள் கோரமங்களா, ஜெயநகர் மற்றும் காந்தி பஜார் பகுதிகளில் கட்டப்படும்.
ஓல்டு ஏர்போர்ட் ரோடு, ராஜாஜிநகர் டாக்டர்.ராஜ்குமார் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள், 12 மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 51.36 கி.மீ தூரம் சிக்னல் இல்லாத சாலைகளாக மாற்றப்படும்.
88 ஏரிகள் மேம்படுத்தப்படும். முதல்கட்டமாக 40 ஏரிகளில் பணிகள் தொடங்கும். இந்திரா கேண்டீன்களுக்கு (அம்மா கேண்டீன் போன்றது) ரூ.120 கோடி ஒதுக்கப்படும்.
105.55 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ 3ம் கட்ட பணிகளுக்கான முழு தகவல் அறிக்கை தயாரிக்கப்படும். இதன்படி, ஜேபி நகரில் இருந்து ஹெப்பால் வழியாக கேஆர்புரத்திற்கும், பொம்மசந்திரா முதல் அத்திபெலே வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமையும்.
மெட்ரோ ரயிலின் 2வது கட்ட பணிகளின் ஒரு அம்சமாக சில்க்போர்ட் ஜங்ஷனில் இருந்து கேஆர்புரம் வரையிலான 17 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். இதற்கு ரூ.4,202 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நாகவரா முதல் சர்வதேச விமான நிலையம் வரையிலான 29.06 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.5950கோடி ஒதுக்கீடு.
தற்போது நடைபெற்று வரும், பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு, மைசூர்ரோடு-கெங்கேரி, நாகசந்திரா-பெங்களூர் சர்வதேச பொருட்காட்சி திடல், எலேச்சனஹள்ளி-பொம்மசந்திரா மற்றும் கொட்டிகெரே - நாகவரா வரையிலான, மெட்ரோ 2வது வழித்தட பணிகள் 2021க்குள் நிறைவடையும்.
பெல்லந்தூர் ஏரியை சீரமைக்க ரூ.50 கோடி.
நாடபிரபு கெம்பேகவுடா லேஅவுட் பகுதியில் 5000 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
கோனதாசபுரா பகுதியில் 25 ஏக்கரில் ஹவுசிங் காம்ப்ளக்ஸ் அமைக்கப்படும். பெங்களூரை 2031க்குள் மாடல் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் சித்தராமையா தெரிவித்தார்.