காவிரி.. அனைத்து கட்சியினருடன் குடியரசு தலைவரை சந்திக்க கர்நாடக அமைச்சரவை முடிவு?
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டது. கர்நாடக அனைத்து கட்சி தலைவர்களையும், எம்.பிக்களையும் அழைத்து குடியரசு தலைவரிடம் சென்று முறையிட்டு, மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா என்பது குறித்து கேபினட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடக மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சர்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கடந்த 5ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பின்னர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று முதல் வருகிற 27ம் தேதிவரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டமும், மாலையில் அனைத்து கட்சி கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இதன்படி, சுமார் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம், விதானசவுதாவில் கூடியது. காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து இதில் அதிகம் விவாதிக்கப்பட்டது. கர்நாடக அனைத்து கட்சி தலைவர்களையும், எம்.பிக்களையும் அழைத்து குடியரசு தலைவரிடம் சென்று முறையிட்டு, மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா என்பது குறித்து கேபினட்டில் கருத்து கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடக மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சர்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications