கர்நாடகாவில் 14 அமைச்சர்கள் நீக்கம், 13 புது முகங்களுக்கு வாய்ப்பு...சித்தராமையா அதிரடி !
பெங்களூரு: கார்நாடக மாநிலத்தில் 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சபாநாயகர் காகோடூ திம்பப்பா உள்பட 13 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.
காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் தோற்ற நிலையில், ஆட்சியில் இருக்கும் ஒரே பெரிய மாநிலமான கர்நாடகாவில் வலுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அனுமதி வழங்கியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வருடன், சோனியா மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் வைத்து சந்தித்து பேசிய சித்தராமையா, இம்மாற்றத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார்.
இதன்படி ஊழல் புகாரில் சிக்கியவர்கள், கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியவர்கள், திறமையாக செயல்படாதவர்கள் என 14 அமைச்சர்களை நீக்கி விட்டு இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதனை அடுத்து முதல்வர் சித்தராமையாக அதிரடி மற்றங்களை மேற்கொண்டுள்ளார். இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் காகோடூ திம்பப்பா, தன்வீர் சேட், ரமேஷ் குமார், பாசாவராஜ் ராயன் ரெட்டி, எச்.ஒய்.மீடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, எம்.ஆர். சீத்தாராம், சந்தோஷ் லாட் மற்றும் ரமேஷ் ஜார்கோலி ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரியங் கார்கே, ருத்ரப்பா லாமணி, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் பிரமோத் மாதவரா ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ராஜ் பவனில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.