கான்ஸ்டபிள் சேரை 'ரிப்பேர்' செய்த கர்நாடக முதல்வர்
பெங்களூர்: தலைமைச் செயலக பாதுகாப்புக்காக அமர்ந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிளின் நாற்காலி கால்கள் ஆட்டம் போடுவதை பார்த்த கர்நாடக முதல்வர் சித்தாரமையா, உடனடியாக புதிய நாற்காலியை அளிக்க உத்தரவிட்டதை காவல்துறையினர் சிலாகித்து பேசிக்கொள்கிறார்கள்.
கர்நாடக அரசின் தலைமைச் செயலகம் விதானசவுதா கட்டிடத்தில் இயங்கிவருகிறது. தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பதற்காக நேற்று முதல்வர் சித்தராமையா விதானசவுதாவுக்கு வந்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் மேற்கு நுழைவாயில் வாசலில் அவர் காரில் இருந்து இறங்கி நடந்து வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் ஓங்கி சல்யூட் அடித்தார். அதை கண்டுகொள்ளாத சித்தராமையா அந்த கான்ஸ்டபிள் உட்கார்ந்திருந்த நாற்காலியின் கால்கள் உடைபட்டிருந்ததை கவனித்தார்.
உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்து புது நாற்காலியை கான்ஸ்டபிளுக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து பளபளக்கும் புது நாற்காலியில் இன்று அந்த கான்ஸ்டபிள் உட்கார்ந்திருக்கிறார். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக செல்லும் முதல்வர்களுக்கு மத்தியில், கான்ஸ்டபிள் நாற்காலியின் கால் உடைந்திருந்ததை பார்த்து சரி செய்ய கூறிய சித்தராமையாவை பற்றி போலீசார் சிலாகித்து பேசிவருகிறார்கள்.