ரோகித் தற்கொலை... கர்நாடகாவிலும் தலித் மாணவர்களுக்கு நீதிகோரும் போராட்டம் வெடிக்கிறது!
பெங்களூர்: ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி கோரி கர்நாடகாவின் பெங்களூரில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் இந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக குரல் எழுப்பியதால் ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் பல்கலைக் கழக விடுதியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டத்தை ரோகித் வெமுலா உள்ளிட்டோர் நடத்தினர்.
இந்நிலையில் ரோகித் வெமுலா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் கர்நாடகாவிலும் பல கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தொடர்பாக கர்நாடகா தலித் பகுஜன் இயக்கத்தின் தலைவர் வெங்கடேஷ், நமது ஒன் இந்தியாவிடம் கூறுகையில், கர்நாடகாவிலும் தலித் மாணவர்கள் கடும் ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையாகட்டும்... அவர்களது விடுதிகளாகட்டும்... மிக மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர்..
உயர்கல்வி படிக்கும் தலித் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருகிற ஏழை மாணவர்கள்.. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்... பேராசிரியர்கள் கூட அவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.. இது தொடர்பாக நிறையவே புகார்கள் வந்துள்ளன என்றார்.
இதேபோல் சமஜிக பரிவர்த்தன ஜனாந்தோலனா என்ற அமைப்பின் செயற்பாட்டாளர் ஒய். மாரிசுவாமி கூறுகையில், மாநிலத்தில் மக்கள் தொகையில் 17.15% பேர் தலித்துகள். 6.95% பேர் பழங்குடியினர்.. இந்த சிறுபான்மையினரது பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் நாட்டின் வளர்ச்சியை அடைந்துவிட முடியாது என்கிறார்.
பெங்களூரிலும் ரோகித் வெமுலாவுக்கு நீதி கோரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.