கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய பள்ளி மாணவி சாவு: தற்கொலை என்கிறது சிஐடி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி பகுதியில் 14 வயது சிறுமி இறந்த விவகாரம் இரு மதங்களுக்கு நடுவேயான பிரச்சினையாக மாற இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சினைக்கு சிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா (பழைய பெயர் ஷிமோகா) மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம், மர்மமான முறையில் இறந்தார். சிறுமியின் தந்தை இதுகுறித்து போலீசில் அளித்த புகாரில், தனது மகளை சில மாற்றுமதத்து வாலிபர்கள் கடத்தி சென்றதாகவும், அவர்கள் பலாத்காரம் செய்து விஷத்தை வாயில் ஊற்றி தனது மகளை கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த புகார் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் தந்தைக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி தீர்த்தஹள்ளியில் பாஜக நடத்திய பந்த் காரணமாக, ஐந்து நாட்கள் அந்த நகரமே ஸ்தம்பித்தது. மத மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியது.
பாஜக மற்றும் உள்ளூர் மக்களின் ஆத்திரத்துக்கு பணிந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிஐடி தனது விசாரணையை நடத்தி தற்போது அரசுக்கு 233 பக்க அறிக்கையை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் சிறுமி பலாத்காரமும் செய்யப்படவில்லை, கொலையும் செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள்: 8ம் வகுப்புவரை கன்னட மீடியத்தில் படித்த சிறுமி, 9ம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் பாடங்களை கற்க முடியாமல் திணறி மதிப்பெண்கள் குறைந்துள்ளன. சிறுமியின் உடன் படிக்கும் மற்ற மாணவிகளிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், மதிப்பெண் குறைவு காரணமாக அவர் மனமுடைந்து போயிருந்தது தெரியவந்தது.
மதிப்பெண் குறைபாடு காரணமாக, தற்கொலை செய்துகொள்ளுவதாக கூறி தனது புத்தக பையில் சிறுமி எழுதி வைத்த மரண கடிதத்தை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தோம். அந்த அறிக்கையின்படி இறந்த மாணவிதான் அக்கடிதத்தை எழுதியிருந்தது தெரியவந்துள்ளது.
பிரேதபரிசோதனை அறிக்கையிலும், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகவில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே இது முற்றிலும் தற்கொலை வழக்காகும். பலாத்காரம் மற்றும் கொலை நடக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் இந்த அறிக்கையை பாஜக ஏற்க மறுத்துள்ளது. சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிடும்போதே பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு கோரியிருந்தது. எனவே அதே கோரிக்கையை இப்போது மீண்டும் முன்வைக்கிறது.












Click it and Unblock the Notifications