இன்னொரு கோவா கூடவே கூடாது.. கர்நாடகாவுக்கு முக்கியத் தலைவர்களை அனுப்பி வைத்த காங். மேலிடம்
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் கர்நாடகா சென்று இருக்கிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் கர்நாடகா சென்று இருக்கிறார்கள். கூட்டணி குறித்து சீக்கிரமாக விவாதிக்க அவர்கள் அம்மாநிலத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதுவரை வந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எல்லாம், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் உதவியுடன் மட்டுமே பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியும்.
இதனால் இரண்டு கட்சிகளும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியிடம் கூட்டணி வைக்க முயற்சி எடுத்து வருகிறது. முக்கியமாக அந்த கட்சியின் தலைவர் தேவகவுடா, மற்றும் குமாரசாமி ஆகியோரிடம் எப்படியாவது கூட்டணி குறித்து முதலில் பேச்சு எடுக்க முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி புதிய திட்டமிட்டுள்ளது.
கோவா, மேகாலயா போன்ற மாநில தேர்தல்களில் காங்கிரஸ் முக்கியமான விஷயம் ஒன்று கற்றுள்ளது. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து பேச காங்கிரஸ் தலைவர்கள் அந்த மாநிலத்தில் இல்லாத காரணத்தால், பாஜக அதை பயன்படுத்தி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த முறை அப்படி நடக்க விடக்கூடாது என்று முடிவெடுத்துள்ளது.
இதற்காக தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான, குலாம் நபி ஆசாத், அசோக் கோஹ்லோட் ஆகியோர் கர்நாடகா வந்துள்ளனர். இதில் குலாம் நபி ஆசாத் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கவுடாவின் முக்கியமான நபர். இதன் காரணமாக கூட்டணி குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக இருக்கும். அதேபோல் அசோக் கோஹ்லோட், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான முடிவெடுக்கும் தலைவர்களில் ஒருவராக இருப்பதால், கூட்டணிக்காக முக்கிய பேச்சுக்களை நடத்துவார்.
இதுமட்டுமில்லாமல் சிங்கப்பூர் சென்று இருக்கும் தேவகவுடாவின் மகன் குமாரசாமியை சந்திக்கவும் காங்கிரஸ் கட்சி தங்கள் உறுப்பினர்களை ரகசியமாக அனுப்பி உள்ளது. ஆனால் எந்த உறுப்பினர்கள் சிங்கப்பூர் சென்று இருக்கிறார்கள் என்று இதுவரை விவரம் வெளியாகவில்லை.