கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும்... எடியூரப்பா முதல்வராவார்... டிவி 5 கருத்து கணிப்பு
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும், எடியூரப்பா முதல்வராவார் என்று கன்னடாவின் டிவி 5 கருத்து கணிப்பு கூறியுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும், எடியூரப்பா முதல்வராவார் என்று கன்னடா டிவி சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி தேர்தல் சட்டசபை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும், இந்த இரண்டும் அல்லாமல் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கட்டிலில் அமரவும் தீவிரமாக போராடி வருகின்றன
மொத்தம் 225 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள், எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது போன்ற கருத்து கணிப்புகளை டிவி சேனல்கள் நடத்தி வருகின்றன.
வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு
இந்நிலையில் டிவி 5 என்ற கன்னட சேனல் டிவி 5 கருத்து கணிப்பு நடத்தி அதை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் மே 6 -ஆம் தேதி வரை இந்த கணிப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 38,400 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.
ஜேடிஎஸ் கட்சிக்கு 20 சதவீதம்
சர்வே எடுக்கப்பட்ட தொகுதிகளில் குடிநீர், சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவையே முக்கிய பிரச்சினைகளாக உள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்தனர். இந்த முடிவுகள் இன்று வெளியானது. அதில் பாஜகவுக்கு 115 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களும் , ஜேடிஎஸ் கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கும். இந்த கருத்து கணிப்பின் படி, பாஜகவுக்கு 36 முதல் 38 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 33 முதல் 35 சதவீத வாக்குகளும், ஜேடிஎஸ் கட்சிக்கு 20 முதல் 22 சதவீத வாக்குகளும் கிடைக்கும்.
சித்தராமையாவின் செயல்பாடுகள்
லிங்காயத்துகளை தனி மதமாக அறிவிக்க சித்தராமையா அரசு முடிவு செய்துள்ளதால் 61.11 சதவீத மக்கள் காங்கிரஸ் அரசை ஏற்றுக் கொள்ளவில்லை. வெறும் 38.89 சதவீத மக்களே இந்த முடிவை ஏற்றுக் கொண்டு காங்கிரஸுக்கு வாக்களிப்பர். 50.73 சதவீத மக்கள் முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடுகளில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 49.37 சதவீத மக்களுக்கு திருப்தி இல்லை.
மக்களவை தேர்தலில் என்ன நடக்கும்
தற்போது உள்ள சட்டசபையில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய 3 கட்சிகளின் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளில் 53.6 சதவீத மக்களுக்கு திருப்தி அளிப்பதாகவும், 46.4 சதவீத மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை 55.35 சதவீத மக்களுக்கு பிடித்திருக்கிறது. வெறும் 44.65 சதவீத மக்களுக்கு மட்டுமே ராகுல் காந்தியை பிடித்திருக்கிறது. இதனால் வரும் 2019-ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடியே ராகுலை வெற்றி கொள்வார் என தெரிகிறது.